உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 17, 2016

மோடியால் அவதியுறும் வெள்ளைப்பண வெளிநாடுவாழ் இந்தியர்கள்



மோடியின் திட்டம் அடித்தட்டு இந்தியர்களின் பொருளாதாரத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளதால் நாடே திவலாகும் நிலைக்கு தள்ளப்படலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். சாமானிய இந்தியர்களின் அன்றாட வாழ்வு மிகப்பெரும் கேள்விக்குரியாக்கப்பட்டுள்ளது குறித்து செய்திகள் வாயிலாக அறிந்து கொள்வதை விட மக்களே அனுபவரீதியில் பெற்றுவருகின்றனர் என்பதால் வெள்ளைப்பண இந்தியர்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்ற கேள்வியை மட்டும் இங்கு வைப்போம்.

சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசுகளால் இந்தியர்களுக்கு வேலைவழங்க துப்பில்லாமல் போனதால் வேறு வழியின்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்குள் தள்ளப்பட்டவர்கள் நாம் அதாவது இந்திய பொருளாதாரத்தின் அச்சாணியாக விளங்கும் அந்நியச் செலாவணி என்னும் பாலை விட வெண்மையான வெள்ளை பணத்தை மட்டுமே ஈட்டித்தருபவர்கள் நாம் என்றாலும் நமக்கான உரிய மரியாதையை, நம்மையும் இந்தியர்களாக மதிக்கும் போக்கை காணவே முடியவில்லை.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள் என்ற சுகம் நம்மைப் போன்ற தகுதிவாய்ந்த இந்தியர்கள் விட்டுத்தந்து வெளிநாட்டுக்குச் சென்றதால் கிடைத்த வாய்ப்பு என்பதை உணர்வார்களேயானால் விமான நிலையங்களில் நம்மிடம் கீழ்த்தரமாக நடந்து கொள்வற்கு அவர்கள் வெட்கப்படுவர்.

சரி வெள்ளைப்பணத்திற்குள் மீண்டும் வருவோம், நாம் வெளிநாட்டில் ஈட்டும் பொருளாதாரம் முழுக்க முழுக்க வெள்ளையே அன்றி வேறில்லை. இந்நிலையில் கம்பெனிக்காரன் இரக்கப்பட்டுத் தரும் சொற்ப நாள் விடுமுறையில் ஊருக்கு வரும் நாம் வெளிநாட்டு கரன்சியை இந்தியாவிற்குள் முழுமையாக மாற்ற முடியாத சூழல் நிலவுகிறது அல்லது நமது வங்கி கணக்கிற்கு அனுப்பி விட்டுச் சென்றாலும் இயங்காத ATMகளிலிருந்து நமது வெள்ளை பணத்தை எடுக்க முடியாது, ஒருவேளை ATM இயங்கினாலும் தினம் 2 ஆயிரத்திற்கு மேல் நமது வெள்ளை பணத்தை எடுக்க முடியாது. 

வேறுவழியின்றி வங்கியில் மாற்றச் சென்றாலும் 2 ஆயிரத்திற்கு மேல் மாற்ற முடியாது அதுவும் விரலில் மை வைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதால் டிசம்பர் இறுதி வரை மறுபடியும் ஒருமுறை நமது வெள்ளைப்பணம் 2 ஆயிரம் ரூபாயை கூட எடுக்க முடியாது. இதில் எத்தனையோ தலையாய பிரச்சனைகளை இந்த விடுமுறை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என வேறு திட்டமிட்டு சென்றிருப்போம்.

நம் அன்றாட வாழ்வில் கலந்துள்ள பால்காரரிடமோ, காய்கறிகாரரிடமோ, மீன் வியாபாரியிடமோ, சிறு மளிகைக்கடைகாரரிடமோ நாம் வங்கிப் பரிவர்த்தணை அடிப்படையில் வியாபாரம் செய்வது என்பது கனவில் கூட சாத்தியமில்லாததுடன் இலவச இணைப்பாய் மருந்தும் மருத்துவமும் தினசரி வாழ்வின் தவிர்க்க முடியாத துன்பம்.

வெளிநாட்டில் நாம் உழைப்பது நமது குடும்பத்திற்காக தான் என்றாலும் அதிலிருந்து சம்பந்தமேயில்லாமல் அந்நியச் செலாவணி எனும் வகையில் ஆதாயத்தை மட்டுமே அடைவது இந்திய அரசு. இந்நிலையில் நமக்கு கிடைக்கும் குறுகிய நாள் விடுமுறையில் குடும்பத்துடன் செலவிட செல்லும் முழுக்க முழுக்க கரைபடாத வெள்ளை பணத்திற்கு சொந்தக்காரர்களாகிய நாம் இந்தியாவில் தங்கியிருக்கும் நாட்களில் செலவுக்கு பணமின்றி மண்ணையா அள்ளித்தின்ன முடியும்! 

நாங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்கள் அல்ல, சம்பாத்தியத்திற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்குள் தள்ளப்பட்ட இந்தியர்கள். 50 நாட்களுக்குள் நிகழும் என சொல்லப்படும் அந்த ஜீம்பூம்பா மாற்றத்திற்கு முன் அமைந்துவிட்ட எங்கள் விடுமுறை நாட்களில் எங்களுக்கான தீர்வு என்ன?

இவண்

தற்போது விடுமுறையில் வந்துள்ள அல்லது வரவுள்ள வெளிநாடுவாழ் அனைத்து வெள்ளைப்பண இந்தியர்களுக்காக

அதிரை அமீன்

Wednesday, November 9, 2016

வாலிப பருவம் எதிர்நோக்கும் சவால்கள் - சிறப்புரை மவ்லவி. அப்துல் பாசித் புஹாரி (துபையில் 11.11.2016 வெள்ளி மஃரிபுக்கு பின்)

இன்ஷா அல்லாஹ்...
அல்மனார் சென்டர், துபை 
மார்க்க விளக்க நிகழ்ச்சி
11.11.2016 வெள்ளிக்கிழமை, மாலை 06.30 மணி



அனைவரும் அவசியம் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்.
-- 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931

Wednesday, November 2, 2016

Tuesday, October 25, 2016

அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!



அன்பு நிறைந்த அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நமதூரில், அதிரையின் கல்வித்தந்தை ஷேக் ஜலாலுதீன் அப்பா அவர்களின் தன்னலமற்ற தியாகத்தால் உருவாகிய கல்வி நிறுவனங்கள் இன்று வரை பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கல்விக்கண் திறந்துள்ளது இனியும் திறக்கும் இன்ஷா அல்லாஹ். அன்னார் மற்றும் அவருடன் கல்விப்பணியில் இணைந்து பயணித்து மறைந்த அனைத்து ஊழியர்கள், பேராசிரியர்களின் மறுமை சிறக்க இருகரமேந்தி நன்றியுடன் பிரார்த்திக்கின்றோம்.

சில பத்தாண்டுகளுக்கு முன் நமது கல்லூரியை தேடிவந்து பல வெளிநாட்டு மாணவர்கள் (ஆப்பிரிக்கர்கள்) படித்த நினைவுகள் நெஞ்சோடு இன்னும் நிழலாடுகிறது. இத்தனைக்கும் அவர்கள் தங்கிப்படிக்கும் அளவுக்கு நமதூரின் கட்டமைப்பு இருக்கவில்லை, இன்றும் இல்லை.

காடு, செடிகளுக்கு மத்தியில் சாதாரண சிமெண்ட் ஓட்டுக்கட்டிடங்களில் நடந்து வந்த நமது கல்லூரி இன்று பலரின் உழைப்பால் ஒரு வளர்ந்த நகரத்தில் செயல்படும் கல்லூரிக்கு இணையாக பொலிவுற்று விளங்குகின்றது அல்ஹம்துலில்லாஹ், இது புறத்தோற்றம்.

இன்றுள்ள பேராசிரியப் பெருந்தகைகளின் முயற்சியால் மாணவர்களுக்கு வழிகாட்டும் பல்வேறு கருத்தரங்குகள், வேலைவாய்ப்பு முகாம்கள் என நடத்தி அசத்தி வருகின்றீர்கள், இந்த அகத்தோற்ற வளர்ச்சியை சமூக ஊடகங்கள் வழியாக அறிந்து மிக்க பெருமிதம் கொள்கின்றோம். இதையே நடந்து முடிந்தபின் செய்திகளாக தருவதைவிட நடக்குமுன் அறியத்தந்தால் நமது கல்லூரியில் பயிலும் நாங்கள் அறிந்த மாணவர்களையும் ஆர்வமூட்டி கலந்து கொள்ளச் செய்ய இயலும்.

மேலும், இந்தக் கருத்தரங்குகளில் மாணவர்களைவிட மாணவிகளே பெரும்பான்மையாக கலந்து கொள்கின்றனர், அதிலும் நமதூர் மாணவர்கள் மிக மிக அரிதாக கலந்து கொள்கின்றனர். எனவே, மாணவர்களும் அதிகம் பங்குகொள்ள ஆர்வமூட்டுவதுடன் நமதூர் மாணவர்களும் பயன்பெற அவர்களின் பெற்றோருக்கு தெரிவித்தாவது முயற்சி மேற்கொள்ள வேண்டுகிறோம்.


உங்களிடம் மேலும் சில கனிவான வேண்டுகோள்:

இன்று நமதூரை சேர்ந்த, காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்கள் உள்நாட்டிலும் பல சர்வதேச நாடுகளிலும் பொருளீட்டி வருகின்றனர் என்றாலும் வேறு எந்த நாடுகளையும் விட அதிகமானோர் பணியாற்றும் அமீரகத்தில் நமது அதிரையை சேர்ந்த பல மாணவர்கள் படும்பாட்டை உங்களிடம் சுட்ட விரும்புகிறேன்.

பட்டதாரியானால் போதும் என்ற மனநிலையுடன் படித்துவிட்டு அமீரகத்திற்குள் நுழையும் அதிரை மாணவர்கள் இங்கு நேர்முகத்  தேர்வை சந்திப்பதற்கும், ஆங்கிலத்தில் ஓரளவேனும் உரையாடுவதற்கும் மிகுந்த தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகவே இருக்கின்றனர்.

மேலும் பலர் பட்டதாரியாக இருக்கும் நிலையில் கல்வியறிவு அதிகம் தேவையில்லாத 'பைக் மெஸஞ்சர்' போன்ற ஆபத்தான பணிகளையே தேர்ந்தெடுக்கின்றனர், இந்த நிலைக்கு அவர்களுக்கு முன்வந்து அமீரகத்தில் பணியாற்றும் அவர்களின் நண்பர்களின் தவறான வழிகாட்டலும் இன்னொரு காரணம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

எனவே, நமது கல்லூரி மாணவர்கள் ஓரளவு ஆங்கிலத்தில் பதிலளிக்கவும், நேர்முகத் தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் தினசரி வகுப்புக்களில் கூடுதல் கவனம் செலுத்துவதுடன் மனநல வல்லுனர்களை கொண்டு நம்பிக்கையளிக்கும் ஆலோசணை கருத்தரங்குகளையும் அடிக்கடி நடத்திட வேண்டுகிறோம்.

மிக முக்கியமாக, பேராசிரியப் பெருந்தகைகளே! உங்களுடைய திறமைகளை, அர்ப்பணிப்பு உணர்வுகளை, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் உங்களுடைய நல்லெண்ணத்தை மதிக்கும் அதேவேளையில் உங்களுக்குப் பின்னும் இத்தூய பணிகளை தொடர்ந்து செய்திடும் கல்வி வாரிசுகளை உருவாக்கிவிட்டு செல்வதும் உங்களுடைய கடமை என்பதை உணர்ந்து அதற்கேற்ற முன்னேற்பாடுகளை இயன்றளவு இப்பொழுதே செய்யத் துவங்குவீர் எனவும் நம்புகிறோம்.

Wednesday, October 19, 2016

வேடிக்கை மனிதர்களா நாம் ?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்.....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக மாதாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி ஒவ்வோர் மாதமும் சிறப்பாக நடைபெற்று வருவது தாங்கள் அறிந்ததே.

அதேபோல் இன்ஷாஅல்லாஹ் வியாழக்கிழமை 20th Oct' 2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு 08:30 மணிஅளவில் மெளலவி ரியாஸ் இப்னு தஹான் அவர்கள்    

வேடிக்கை மனிதர்களா நாம் ? 

என்ற தலைப்பில்  MTCT மர்க்கஸில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.



விபரங்கள் நோட்டீஸ் அட்டேச்மென்டாக JPEG ஃபார்மேட் இணைப்பில் உள்ளது.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்


For Madukkur Thowheed Charitable Trust


Wednesday, October 12, 2016

துபையில் 14-10-2016 வெள்ளி மாலையில் மார்க்க விளக்க நிகழ்ச்சி

இன்ஷா அல்லாஹ்...
துபை அல்மனார் சென்டரில்
மார்க்க விளக்க நிகழ்ச்சி

சிறப்புரை: மௌலவி. அப்துல் மஜீத் மஹ்லரி அவர்கள்
(முதல்வர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் கல்லூரி-காயல்பட்டிணம்)

14-10-2016 வெள்ளிக்கிழமை
மாலை 4.30 மணிமுதல் இரவு 8 மணிவரை


அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும்.

அதிராம்பட்டினத்தில் புதிய தொழில் முனைவோருக்கான மாபெரும் பயிற்சி முகாம்: 'ஆன்லைன்' மூலம் முன்பதிவு செய்ய அழைப்பு !

அதிராம்பட்டினம், அக்-12
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
பல நூற்றாண்டுகளாக அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை முதலான கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த நம் முன்னோர்கள் இலங்கை, பர்மா, மலேயா, சிங்கப்பூர், ஹாங்காங், அரபு வளைகுடா நாடுகள் ஆகியவற்றுடன் கடல் வாணிபம் செய்துவந்தார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.  இந்த வணிக வரலாற்று முன்மாதிரியை நாம் மறந்துவிடக் கூடாது.

மிக அண்மைக் காலமாக, அதாவது 1960 – 1970 களில் அரபு வளைகுடாப் பகுதியில் எண்ணெய் வளம் கொழிக்கத் தொடங்கியபோது நமது இளந்தலைமுறையினர் அந்தப் பகுதிகளுக்குச் சென்று, தொழில் பயிற்சி பெற்றவர்களாகவும் ( Skilled ), அடிமட்டப் பணியாளர்களாகவும் ( Unskilled ) வேலைகள் செய்து, தம் பொருளாதாரத்தை வளர்த்துக்கொண்டனர்.  இந்தப் போக்கு எவ்வளவு நாளைக்கு?  அரபு நாடுகளின்  எண்ணெய் வளம் குறைந்தால், அவர்களுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால், நாம் என்ன செய்வது?  நம் சந்ததிகளுக்குப் பிழைப்பு வேண்டாமா?  அவர்களின் எதிர்கால வாழ்க்கையைக் கேள்விக்குரியாக்க வேண்டுமா?
இத்தகைய அவல நிலையைப் போக்குவதற்குத்தான், நாங்கள் பல மாதங்களாகச் சிந்தனை வயப்பட்டு, நம் மக்களைத் தொழில் முனைவோராகவும், பெற்ற பணியறிவையும் பட்டறிவையும் முறையாக நமது நாட்டிலேயே பயன்படுத்தி, அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவதற்கான ஒரு பயிற்சிப் பட்டறையை Entrepreneurship Development Program என்ற பெயரில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம், இன்ஷா அல்லாஹ்.

நமது நாட்டிலேயே நமக்கென ஒரு தொழில் அமைந்துவிட்டால், அது நமக்குப்பின் வரவிருக்கும் நம்முடைய பல தலைமுறையினருக்குப் பயனளிக்கும் அல்லவா?  டாட்டா, பிர்லா, ரிலையன்ஸ், BSA Group போன்ற வணிக நிறுவனங்கள் சிறிய அளவில் தோன்றி, இன்று பெரும்பெரும் வணிக ஆளுமைகளாக (Conglamorates) வளர்ந்து, அவர்களின் சந்ததிகளுக்குப் பயன்பட்டு வருவதை நாம் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது அல்லவா?
இவ்வடிப்படையில்தான், SEAPOL குரூப்  Entrepreneurship Development Program (EDP) என்ற திட்டத்தை உருவாக்கி, சென்னை United Economic Forum, திருச்சி MAM College of Engineering and Technology ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, நம் அதிரை மக்களுக்குப பயிற்சியளிக்கும் அருமையான வாய்ப்பை ஏற்பட்டுத்தித் தர முன்வந்துள்ளது.

ஆர்வமும் தகுதியும் எதிர்பார்ப்பும் உடையவர்களும், வெளிநாடுகளிலிருந்து விடை பெற்றுத் திரும்பி வந்தவர்களும், ஊரிலுள்ள ஆர்வலர்களும் இந்தப் பயிற்சிமுகாமில் கலந்துகொள்ளலாம்.  குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆர்வமுள்ள அனைவரும் கீழ்க்காணும் இணைப்பில் தம் பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

பயிற்சி முகாம் நடக்கும் இடம்: 
ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்ட் ( Richway Garden Restaurant ), பட்டுக்கோட்டை ரோடு, அதிராம்பட்டினம்.  
நாள்:  
2016 டிசம்பர் 24 ஆம் தேதி, சனிக்கிழமை 
நேரம்: 
காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை.  

மேற்கொண்டு விவரம் வேண்டுவோர், கீழ்க்காணும் இணைய தளங்களுக்குச் சென்று பார்த்துக்கொள்ளலாம்:
http://www.unitedeconomicforum.org/    http://www.mamcet.com/

அன்புடன் அழைக்கும்,
M.S TAJUDEEN
Managing Director,
Seaport Logistics Pvt. Ltd.

Sunday, August 14, 2016

அமீரக விடுமுறையில் 'ஜபல் அல் ஜைஷ்' மலையேற்றம்! (படங்களுடன்)


மீண்டும் ஒரு பயணப்புராணம் மூலமாக உங்கள் அனைவரையும் 'உசுப்பேத்துவதில்' பேரானந்தம்.

புனித ரமலானிலேயே ஹஜ் பெருநாள் விடுமுறையில் ஊருக்குச் செல்ல பலரும் திட்டமிட்டு தயாராகி இருப்பீர்கள் என்றாலும் மலையளவு உயர்ந்துள்ள விமான கட்டணத்தால் ஊர் போகும் பயணத்தை தள்ளிப் போட்டுள்ளவர்களுக்காக ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்கு ஜாலி டிரிப் சென்றுவர சில டிப்ஸ்...




முன்னெச்சரிக்கை! ரசனையில்லாதவர்களை உடன் அழைத்துச் செல்லாதீர் ஏனென்றால் 'பூனையை மடியில் கட்டிக் கொண்டு போன நிலை' உங்களுக்கும் வரக்கூடாது என்ற அனுபவ நல்லெண்ணம் தான். 



பொதுவாக பெருநாள் விடுமுறை காலங்கள் மற்றும் அரிதாய் அமையும் அமீரக அரசு விடுமுறை காலங்களில்  சுற்றிப் பார்ப்பதற்கென்றே துபையிலும், அல் அய்னிலும், அபுதாபியிலும், ஃபுஜைராவிலும் அனேக இடங்கள் உள்ளன என்றாலும் இதுவரை செல்லாதவர்கள் மற்றும் மலைப்பாதையில் காரிலோ, பைக்கிலோ பயணம் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் ராஸ் அல் கைமாவில் உள்ள 'படைகளின் மலை' எனப் பொருள்படும் 'ஜபல் அல் ஜைஷ்'.



கடந்த ஈகைத் திருநாள் விடுமுறையில் நமது தாயகத்தின் ஊர் பகுதிகளையும் கிராமங்களையும் நினைவூட்டும் ராஸ் அல் கைமாவின் 'ஜபல் அல் ஜைஷ்' மலைக்குச் செல்லலாம் என்று கிளம்பிய போது 'இந்த வயசுல இது தேவையா? என கமெண்ட் அடித்த இலங்கை சகோதரர் ஒருவரையும் வம்படியாக இழுத்துப் போட்டுக் கொண்டு பயணித்த காலமோ அமீரகத்தில் நிலவும் கடும் கோடைகாலம் என்றாலும் ஆசையே வென்றது.



பசுமையான மரங்கள் நிறைந்த மலையல்ல, வெறும் பாறைகள் மட்டுமே பாட்டுப்படிக்கும் இந்த மலைக்கும் ஓர் ஈர்ப்பு உண்டு. லைலா என்ற கருப்பான பெண் மஜ்னு என்பவனுக்கு பேரழகியாக தெரிந்தாள் அல்லவா அந்த அரேபிய கதையை போல் தான் இயற்கையையும் மலைப்பாதையில் வாகனம் ஒட்டுவதையும் ரசிப்பவர்களுக்கு ஏற்ற இடம் மருந்துக்கு கூட புல் பூண்டுகள் இல்லாது பாறாங்கற்களாலும் பள்ளத்தாக்குகளாலும் வித்தியாசமாக அமைந்துள்ள இந்த மலை. மண்முகடுகள் நிறைந்த மலையடிவாரத்தில் மட்டும் விதிவிலக்காக சில பாலைவனச் செடிகள்.



முதன்முறையாக செல்பவர்களை ஏமாற்றும் அறிவிப்பு பலகை. அல் ஜைஷ் 17 கி.மீ என்ற அறிவிப்பு பலகை ராஸ் அல் கைமாவிலிருந்து இந்த மலைக்கு செல்லும் பாதையில் தென்படும்; ஆனால் அது மலையடிவாரம் வரை செல்வதற்கான அறிவிப்பு மட்டுமே.

அடிவாரத்திலிருந்து மலைக்கு மேல் செல்ல புதிய, அழகிய இருவழிப் பாதை ஆனால் கன்னித்தீவை நினைவூட்டும் முடிவில்லா தொடர்... சாலை. ஒருவழியாய் உச்சிக்கு சென்று திரும்பும் வரை கடைகள் ஏதும் கிடையாது அதனால் தேவையான தண்ணீருடனும், உணவுடனும் செல்வது நலம். பாகிஸ்தானியர், அரபியர்களைப் போல் உணவுப் பொருளை எடுத்துச் சென்றும் மலையடிவாரங்களில் சமைப்பது உங்கள் விருப்பத்திற்குட்பட்டது. ஆங்காங்கே சாலையோர வாகன நிறுத்துமிடங்களில் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றாலும் அதை முறையாக பயன்படுத்தத் தெரியாதவர்களே அதிகம்.




பெருநாள் விடுமுறைகள் போன்ற பொது தொடர் விடுமுறை நாட்களில் போக்குவரத்து நெரிசல் நிச்சயம் அதனால் வாராந்திர விடுமுறை தினங்களில் சென்றுவர வாய்ப்புள்ளோர் பயன்படுத்திக் கொள்க. 

தொடர் பொது விடுமுறை நாட்களில் ஏற்படும் வாகன நெரிசல் ராஸ் அல் கைமாவிலேயே தொடங்கி அடிவாரம் வரை 15 கி.மீ அளவுக்கு நீடிக்கும் என்பதால் காலையிலேயே மலையேறச் செல்வது தான் சிறந்தது. 

வாராந்திர விடுமுறை நாட்களில் சுமார் மாலை 2 அல்லது 2.30 மணியளவில் ராஸ் அல் கைமாவிலிருந்து உங்கள் பயணத்தை துவங்கினால் மலையடிவாரத்தில் உள்ள பள்ளிகளில் அஸர் தொழலாம் மேலும் மஃரிப் தொழுது விட்டு மலையிலிருந்து இறங்கினால் பயணம் சிறப்பாக அமையும் ஏனெனில் இதுவரை மலைப்பாதையில் ஒரு குச்சி பல்பு கூட போடப்படவில்லை என்பதையும் கருத்தில் கொள்க.

மலையேறும் போதும் இறங்கும் போதும் அழகிய இயற்கை காட்சிகளை ரசித்துக் கொண்டும் கேமராவில் பதிந்து கொண்டும் செல்லலாம். மேலும் மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள ஓய்வெடுக்கும் பகுதிகளில் குழந்தைகள் ஒடி விளையாடலாம். ஜபல் அல் ஜைஷ் மலையில் ஏறி இறங்க உவப்பான காலம் வரும் ஹஜ் பெருநாள் விடுமுறை தொடங்கி மார்ச் மாதம் முடிய, அப்புறம் சூடு தான்.

தொடர்கதையாய் செல்லும் தார்ச்சாலை ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் இன்னும் முறையாக செப்பனிடப்படாத கரடுமுரடான சாலையாக நீளும், இவற்றில் 4வீல் டிரைவ் வாகனங்களில் மட்டுமே செல்வது உசிதம் என்பதை விட உங்கள் பயணத்தை அத்துடன் நிறுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம்.

வழமைபோல் அப்துல் காதர் மற்றும் அஷ்ரப் உதவியுடன்
அதிரை அமீன்

Wednesday, August 10, 2016

12.08.2016 - வெள்ளி அன்று துபையில் மெளலவி அப்துல் பாஸித் புஹாரி அவர்களின் மார்க்க விளக்க நிகழ்ச்சி

மெளலவி அப்துல் பாஸித் புஹாரி வர்களின் 
மார்க்க விளக்க நிகழ்ச்சி
AL MANAR CENTRE துபை    12.08.2016     வெள்ளிக்கிழமை



அனைவரும் அவசியம் கலந்துக்கொள்ள அழைக்கிறோம்.

-- 
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931

Monday, August 8, 2016

இன்னும் நாம் அறியாதவற்றையும் படைக்கும் இறை அற்புதம்! இதோ இன்னொரு சான்று!



16:8 وَّالْخَـيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيْرَ لِتَرْكَبُوْهَا وَزِيْنَةً‌ ؕ وَيَخْلُقُ مَا لَا تَعْلَمُوْنَ‏ 
இன்னும், குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும், அலங்காரமாகவும், (அவனே படைத்துள்ளான்) இன்னும், நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான். (அல்குர்அன் 16:8)

எனும் வசனத்தை மெய்ப்படுத்தும் கடற்கலங்கள், பிரம்மாண்ட கப்பல்கள், ஆட்டோமொபைல் வாகனங்கள், விமான வகைகள் மற்றும் ராக்கெட் வகைகள் என வளர்ந்து வரும் வாகன புரட்சியில் இதுவும் ஒர் சான்றாகும் ஆனால் இன்னும் வரவிருப்பது எத்தனையோ, அல்லாஹ் ஒருவனே அறிந்தவன்.

சக்கரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் வாகன புரட்சி ஏற்பட்டதைவிட நிலக்கரி மற்றும் பெட்ரோலிய வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின் ஏற்பட்ட வாகன மறுமலர்ச்சி சட உலகின் போக்கையே திசைமாற்றிவிட்டது.

கடந்த வாரம் தான் முழுமையாகவே சூரிய ஒளியில் இயங்கும் விமானம் ஒன்று உலகை சுற்றி வந்து சாதனை படைத்தது, அதற்குள் ஹீலியம் வாயுவில் இயங்கும் இன்னொரு பிரம்மாண்ட புதிய வகை விமானம் ஒன்று தனது ஆய்வு பறப்பை துவங்கப் போகிற செய்தி வந்துள்ளது.

ஏர்லேண்டர் 10 என முன்பு பெயரிடப்பட்டு தற்பொது 'மார்த்தா குவைன்' என மறுபெயர் சூட்டப்பட்டுள்ள இந்த விமானத்தின் நீளம் 300 அடி, அகலம் 143 அடி. சுமார் 350 மில்லியன் யூரோ செலவு திட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானத்திற்கு தேவையான 1.3 மில்லியன் கன அடி ஹீலியம் வாயுவை ஒருமுறை நிரப்பினால் தொடர்ந்து 5 நாட்களுக்கு வானிலேயே 90 மைல் வேகத்தில் 20,000 அடி உயரத்தில் பறக்கலாம்.

தற்போது மிகப் பெரிய பயணிகள் விமானமாக கருதப்படும் ஏர்பஸ் A380 ஜெட் ரக விமானத்தை விட இது 50 அடி (15 மீட்டர்) நீளம் பெரியது. சுமார் 10 டன் எடையை சுமக்கக்கூடிய இந்த விமானத்தை கொண்டு கண்காணிப்பு பணிகள், தொலைத் தொடர்பு பணிகள், அவசரகால உதவிகள் மற்றும் எதிர்காலத்தில் பயணிகள் போக்குவரத்திற்கும் பயன்படுத்த முடியுமென நம்புகிறது இதனை தயாரித்துள்ள பிரிட்டிஷ் நிறுவனமான HAV எனப்படும் Hybrid Air Vehicles.

இந்த விமானம் நடைமுறைக்கு வருமுன் சுமார் 200 மணி நேர சோதனை ஓட்டங்களை மேற்கொள்ளவுள்ளது. மேலும் 1919 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பொறியாளர்களால் ஜெர்மானியர்களின் ஜெப்பெலின் (Zeppelin) எனும் விமான திட்டதிற்கு எதிராக இதுபோன்றதொரு விமானம் வடிவமைக்கப்பட்டு தோல்வியில் முடிந்த கார்டிங்டன், பெட்போர்டுஷையர் விமான தளத்திலேயே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது நடைபெற்று வரும் தரைக்கட்டுப்பாட்டு சோதனைகள் நிறைவுற்றபின் முதல் சோதனை ஓட்டம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.

ஆதாரம்: The Telegraph / Msn
அதிரை அமீன்

Tuesday, July 26, 2016

4000 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச சந்தையாக விளங்கிய துபை

துபை கடற்கழிமுகம் (Creek) தற்போது முன்னேற்றம் அடைந்ததன் விளைவாகத் தான் நவீன உலகில் சர்வதேச சந்தை முனையமாக விளங்குகிறது என்று நினைப்பது தவறு என்பதை நிரூபித்துள்ளது 'சாரூக் அல் ஹதீத்' (Saruq Al Hadid) எனும் இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி கண்டுபிடிப்புகள்.




சர்வதேச கடற்வழி மற்றும் நில வழித்தடத்தின் (Trade Link Cross Roads of Sea Route & Land) மையமாக விளங்கும் துபை நகரிலிருந்து சுமார் 70 கி.மீ தூரத்தில், அபுதாபி எல்லையருகே அமைந்துள்ள 'ருப் அல் காலி' (Rub Al Khali) பாலைவன பிராந்தியத்தில் அமைந்துள்ள 'சாரூக் அல் ஹதீத்' எனும் அகழ்வாய்வு பகுதியில் கிடைத்திருக்கும் சுமார் 900 வகையான பழமையான பொருட்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முந்தைய துபை பல்வேறு உலக நாடுகளான எகிப்து, சிரியா, மெசப்படோமியா (ஈரான், ஈராக்), பஹ்ரைன் (Current Dilmun Area), இந்தியா, ஓமன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் கிழக்கத்திய மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளுடன் அன்று கொண்டிருந்த வர்த்தக தொடர்புகளையும், சர்வதேச சந்தை முனையமாக இன்று போல் அன்றும் கலியுக கால (Iron Age) துபை திகழ்ந்துள்ளது என்பதையும் நிரூபிக்கின்றன.


சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட மூன்றாம் துத்மோஸ் (Thutmose III [the sixth pharaoh of the 18th dynasty] என்கிற 18வது வம்ச பாரோ (பிர்அவ்ன்) மன்னனின் அரசு முத்திரை, இந்தியாவின் ஆபரணங்கள் மணிமாலைகள், பஹ்ரைனின் பாம்பு சிற்பங்களுடைய மண் பாண்டங்கள், சிரியாவின் ஒலிவ (Olive) மரச்சாமான்கள், மெசப்படோமியாவின் நறுமண தூபக் கால்கள் (Incense Burners) என பண்டைய சர்வதேச வணிகப் பொருட்களுடன் விலையுயர்ந்த கற்கள், உலோகங்கள், ஷார்ஜாவின் 'அல் மஹிலா' அகழ்வராய்வு பகுதியில் கிடைத்ததை போன்ற தங்க இழை ஆபரணங்களும், அல் அய்ன் ஓமன் எல்லையில் அமைந்துள்ள அல் ஹஜர் மலை பிராந்திய விவசாய பொருட்களும், ஒட்டக எலும்புகளும் கிடைத்துள்ளன ஆனால் அவர்கள் கடற்பயணம் செய்ததற்கான படகு போன்ற எத்தகைய ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை.


பொதுவாக, மனித நாகரீகம் என்பது ஆறு மற்றும் கடல் பிரதேசங்களை ஒட்டியே தழைத்தோங்கும் ஆனால் 'சாரூக் அல் ஹதீத்' நாகரீகமும் வணிகமும் பாலைவனத்தின் உள்ளே நிகழ்ந்திருப்பது ஆராய்ச்சியாளர்களை திகைக்க வைத்துள்ளது. இன்னும் தோண்டத் தோண்ட பல்வேறு முடிச்சுக்கள் அவிழும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



துபை ஷின்டாகா அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் நடப்பு ஜூலை 3 ஆம் தேதி (03.07.2016) அன்று துபை ஆட்சியாளர் ஷேக். முஹமது அவர்கள் பொதுமக்கள் பார்வைக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 'சாருக் அல் ஹதீத்' சிறப்பு அரும்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.


'சாரூக் அல் ஹதீத்' அகழ்வாராய்ச்சியை ஒட்டி எழும்பியுள்ள விடைதெரியாத அல்லது எதிர்காலத்தில் விடை கிடைக்கலாம் என நம்பக்கூடிய புதிர்கள் சில,

1. எங்கிருந்து இந்த மக்கள் வந்தார்கள்? அவர்களின் இனமென்ன? மொழி என்ன? மதமென்ன?

2. பண்டைய நகரீக மக்கள் தெரிவு செய்தது போல் கடலோரத்தையோ மலையடிவாரங்களை தேர்வு செய்யாமல் நட்டநடு பாலைவன வாழ்வை தேர்ந்தெடுத்ததேன்?

3. அவர்களின் தினசரி வாழ்வு எப்படிப்பட்டது? எத்தகைய உணவு, உடை அவர்களுடையது?

4. அவர்களின் உறைவிடம் எது? கல்லறை எங்கே?

5. அவர்கள் எங்கிருந்து உலோகங்களையும், தங்கத்தையும், இரும்பையும் இங்கு கொண்டு வந்தார்கள்?

6. போக்குவரத்திற்கு ஒட்டகத்தை தவிர வேறு என்ன வகை வாகனங்களை பயன்படுத்தினார்கள்? படகுகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளார்களா?

7. அவர்கள் உபயோகித்த பல பொருட்களின் மீதும் பாம்பு உருவம் பதிக்கப்பட்டுள்ளது ஏன்? பாம்பு புனிதமா அதை வணங்கினார்களா?

8. சிப்பிகளின் மீது 6 கால் நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ள புதிரென்ன?

9. காப்பு போன்ற பெரிய அளவிலான அணிகலன்கள் எதற்காக? ஓட்டகத்தை அலங்கரிக்கவா அல்லது வேறு நோக்கத்திற்கா?

10. ஏன் அவர்கள் பித்தளை கைப்பிடியுடன் இரும்பு கத்தி / வாள்கள் போன்றவற்றை இரு உலோக இணைப்புடன் தயாரித்தனர்?

11. ஓலிவ மரச்சாமான்களை அவர்கள் சிரியாவிலிருந்து இறக்குமதி செய்தார்களா? அல்லது ஒலிவ மரங்களையே இங்கு விளைவித்தார்களா?

12. நடைபெறவுள்ள துபை 2020 எக்ஸ்போவின் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தங்கத்தில் செய்யப்பட்ட பொத்தான் (கீழே படத்தில் காண்க) போன்ற பொருள் அந்த மக்களிடையே வாழ்ந்த செல்வந்தர்கள் அல்லது அரசர்களுடைய உடைகளை அலங்கரித்தவையா?


13. விரல்கள் போன்று உலோகத்தில் செய்யப்பட்டுள்ளவை என்ன? அவை குழந்தைகள் விளையாடும் பொம்மைகளா அல்லது யதார்த்தமாக கொல்லர்களால் செய்யப்பட்டதா?

14. பிரமாண்ட பானைகள் (தாழிகள்) எதற்காக பயன்படுத்தினார்கள்? வெறும் அலங்காரப் பொருளா? அல்லது தண்ணீர், எண்ணெய் சேமிக்கவா?

15. எப்போது அவர்கள் வாழ்வும், நாகரீகமும் முற்றுப்பெற்றது? அங்கிருந்து அவர்கள் சென்ற காரணமென்ன?

என அகழ்வாராய்ச்சியாளர் எழுப்பும் கேள்விகளும் இன்னும் முற்றுப் பெறவில்லை, நடந்து கொண்டிருக்கும் அகழாய்வு பணியும் முற்றுப் பெறவில்லை.

மூலமும் படங்களும்: கல்ஃப் நியூஸ்

கருப்பொருள் தமிழாக்கம்: அதிரை அமீன்

Thursday, July 21, 2016

துபையில் நாளை 22.07.2016 வெள்ளி காலையில் 'ரமலானுக்கு பிறகு' எனும் சிறப்புத் தர்பியா மவ்லவி. அப்துல் பாசித் வழங்குகிறார்.

இன்ஷா அல்லாஹ், நாளை 22.07.2016 காலையில் 8.45 to 11.00 வரை துபை, தெய்ரா, அல் பரஹா பகுதியில் அமைந்துள்ள அல் மனார் குர்ஆன் ஸ்டடி சென்டரில் சிறப்புத் தர்பியா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது, அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.


Wednesday, July 20, 2016

APJ அப்துல் கலாம் அவர்களுக்கு வேண்டாம் சிலை! வேண்டாம் நினைவிடம்!!


அப்துல் கலாம் சிலை, நினைவிட விவகாரமும் முஸ்லீம் மற்றும் பிற மத சகோதர அமைப்புகள் முன்னுள்ள கடமைகளும்

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இந்திய மக்களின் இதயங்களில் வாழ்பவர், இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை நிமிர செய்தவர், தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் நாயகர், கல்வியின் தூதுவர் என எத்தனையோ சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே செல்லலாம். அவை காலத்தால் அழியாதவை. 

இந்தியாவில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த தலைவர்களுக்கு அவர்களின் இறப்புக்குப் பின் சிலையும், நினைவிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அதற்கு அவர்கள் சார்ந்த ஜாதி மத கட்டமைப்பும், அவர்களின் நம்பிக்கையும் அதற்கு அனுமதிக்கின்றன.

அப்துல் கலாம் அவர்களுக்கு முன்னும் இரு இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்து மரணித்திருந்தாலும் அவர்களுக்கு இன்று வரை சிலைகள் இல்லை என்பதையும், அதற்காக இது வரை யாரும் கோரிக்கை எழுப்பவில்லை, போராடவில்லை என்பதையும் நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்துல் கலாம் அவர்கள் ஒரு முஸ்லிமாக பிறந்தவர், முஸ்லிம் என்ற நிலையிலேயே மரணித்தவர் என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள் எனும் போது அவர் சார்ந்த மார்க்கம் (மதம்) அனுமதிக்காத, விரும்பாத ஒன்றை அவர் குடும்பத்தினரே அறியாமையினால் விரும்பினாலும் சிலையையும், நினைவிடத்தையும் எழுப்புவது முறையா? இவற்றை அவர் சார்ந்த சமூகமும், அதன் அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா?

கடந்த சுமார் ஒரு வருடமாக, சாதாரணமாக உள்ள அடக்கத்தலத்தால் அப்துல் கலாம் அவர்களின் சாதனைகளுக்கோ, புகழுக்கோ ஏதேனும் குறை எற்பட்டதா? இனி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சிலையினாலோ, நினைவிடத்தாலோ அவருக்கு புதிதாக ஏதேனும் பெருமைகள் சேர்ந்து விடப்போகிறதா? பொதுமக்களின் அல்லது அவரது குடும்பத்தினரின் வாழ்வாதரத்தில் ஏதும் ஏற்றம் வந்துவிட போகிறதா?

எத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதராக இருந்தாலும் சரியே, வாழும் போதே மிக எளிமையான மனிதராக இருந்த ஒருவருடைய 6 அடி சமாதிக்காக பல ஏக்கர் நிலங்களை வீணடிப்பது அறிவுடைய செயலா? நியாயமா?

பொதுவாக தலைவர்களின் சிலைகள் காகங்களின் கழிப்பிடமாகவும், சிலைகள் அவமதிக்கப்பட்டுவிட்டன என்ற பெயரில் மனிதர்களின் மத்தியில் கலவரங்கள் ஏற்படவே உதவும் என்பது நடைமுறை நிஜமாகவும் இருக்கும் நிலையில், இஸ்லாம் விரும்பாத ஒன்றை பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோருவதையும், மத்திய ஆளும் கட்சி அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் உடனே நிறுத்த வேண்டும்.

அப்துல் கலாம் அவர்களின் பெயரால் நடைபெறவுள்ள வீண் விரயங்கள் நிறுத்தப்படவும், சிலைக்காக செலவழிக்கப்பட உள்ள தொகையை அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ஏழை குழந்தைகளின் கல்வி உயர்வுக்காக செலவிடப்பட வேண்டும், இதற்காக முஸ்லீம் சமூகமும் அதன் அமைப்புகளும், தோழமை சகோதர மக்களும் உடன் கைகோர்த்து தண்டச் செலவுகளையும், வீண் வேலைகலையும் தடுக்க முன்வர வேண்டும்.

அவருடைய கல்லறையை அப்படியே விட்டு விடக்கோரியும், வரும் 2016 ஜூலை 27 அன்று மத்திய அரசு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள சிலை, நினைவிட வேலைகளை நிறுத்த அனைவரும் ஜனநாயக வழியில் போராடி மத்திய அரசுக்கும், அரசியல் கட்சியினருக்கு புரிய வைக்க முன்வருமாறு அனைவரையும்  வேண்டுகிறோம்.

இறைவனின் பொறுப்பில் சென்றுவிட்ட ஒரு ஆத்மாவிற்கு, சர்வதேச தரத்தில் மட்டுமல்ல உள்ளூர் தரத்தில் கூட வேண்டாம் சிலை, வேண்டாம் நினைவிடம்.

Monday, July 18, 2016

பிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்


இந்த வருட ஈதுல் ஃபித்ரு பெருநாளில் தான் எத்தனை சங்கடங்கள்! குழப்பங்கள்!

1. பெருநாளா? மறுநாளா?

2. கொண்டாட்டமா? திண்டாட்டமா?

3. நோன்பு வைப்பதா? விடுவதா?

4. நோன்பை விடுவது அல்லது பெருநாளை விடுவது ஹராமா? ஹலாலா?

5. ஒரே வீட்டினுள் சிலர் முதல் நாளும், சிலர் அடுத்த நாளும் என 2 நாட்கள் பெருநாள் கொண்டாடுவது சரியா?

6. ஒரே ஊருக்குள் 2 பெருநாட்கள் வருவது சரியா? (ஒரு குழுவினர் மிகச்சில வருடங்களுக்கு முன் 3 வது நாளும் தனித்து பெருநாள் கொண்டாடிய அதிசயமும் நடந்துள்ளது)

7. முதல் நாள் பெருநாள் அறிவிக்கப்பட்டதால் பேணுதலுக்காக நோன்பை விட்டுவிட்டு அடுத்த நாள் பெருநாளை மட்டும் கொண்டாடுவது சரியா?

8. 30வது இரவில் மஃரிப் தொழுகை முடிந்தது முதல் பிறை குறித்து (ஏற்று அல்லது மறுத்து) அறிவிப்பு வெளியிடுவார்கள் என இரவின் நெடுநேரம் வரை அதிரை அறிஞர்கள் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் காத்திருந்து கஷ்டப்பட்டது முறையா?

9. கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பெருநாள் தின சிறப்பு சமையல் குறித்து பெண்கள் முடிவெடுக்க முடியாது அல்லாடவிட்டது நியாயமா?

10. ஆண்களில்லா வீட்டிலுள்ள பெண்கள் இரவெல்லாம் அறிவிப்பை எதிர்பார்த்திருந்து விட்டு அடுத்த நாள் காலையில் சமையல் செய்வார்களா? அல்லது பெருநாள் தொழுகைக்கு தயாராவார்களா?

என இன்னும் மக்கள் சந்தித்த சங்கடங்களின் பட்டியலை நீட்ட முடியும் என்றாலும் அதிரை மக்களின் மனங்களை உணர்ந்து கொள்ள இதுவே போதுமானது.

மேற்படி புயலடித்து ஒய்ந்துள்ள இந்த சூழலே பிறை குறித்து நமதூர் ஆலிம்களுக்கு வேண்டுகோள் விடுக்க சரியான தருணமாக கருதுகிறோம். இந்த வருட ரமலான் பெருநாள் பலத்த பெரும் சர்ச்சைகளுக்கிடையே கடந்து சென்று விட்டது. சர்ச்சையின் பிரதான காரணங்களாக நாங்கள் 4 விஷயங்களை கருதுகிறோம்.

1. நம்பகமற்றவர்களாக மக்களால் கருதப்படும் ஒரு குழுவினரால் முதலில் பிறை அறிவிக்கப்பட்டது.

2. நம்பகமானவராக தெரிந்த தலைமை காஜியின் பிறை அறிவிப்பு பல்வேறு காரணிகளால் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.

3. காயல்பாட்டிணத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த மதுஹப் ஆதரவு மக்களின் நம்பகமான பிறை அறிவிப்புகளை, மக்களின் கவனத்திற்கு கூட கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

4. எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி, பிறை காணும் முன்பாகவே பெருநாள் விடுமுறை நாளாக வியாழக்கிழமையை (செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம் அரசு அலுவலகங்களில் சுற்றறிக்கை மூலம்) திணித்து விட்ட தமிழக அரசினரின் காரணம் அறிவிக்கப்படாத நிர்ப்பந்தம். (உண்மை நிலையை இதன் விபரமறிந்த த.ந.அரசு ஊழியர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது)

மேற்படி காரணிகளை பலரும் பலவாறாக ஆய்ந்துவிட்ட நிலையிலும், தூவானமாய் சிலர் அப்பாடா! நல்லவேளை எங்கள் கட்சி தற்போது ஆட்சியிலில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் மேலும் எங்கள் பங்கிற்கு உரசிக் கொண்டிருக்காமல் அதிரை ஆலிம்களிடம் சமர்ப்பிக்க நினைக்கும் எங்கள் கருத்தினுள் நுழைகிறோம்.

வரலாற்றுபூர்வமாக நம் அதிரை மக்கள் பிறை விஷயத்தில் நமதூர் ஆலிம்களின் தீர்ப்பை பின்பற்றியே நோன்பையும் பெருநாளையும் கடைபிடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளோம்.

நமதூர் ஆலிம்கள் பிறை பார்க்க வேண்டிய நாட்களில் அன்றைய 'மரைக்கா பள்ளியில்' கூடி உள்ளூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது வெளியூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது அதிரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரமேயுள்ள இலங்கை பிறையின் (அன்றைய காலத்தில் நம் தொடர்பு எல்லைக்குள்ளிருந்த ஒரே சர்வதேச பிறை) அடிப்படையிலோ இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகளற்ற முந்தைய காலங்களில் பிறை அறிவிப்பை விடுத்து வந்தனர். 

இலங்கை பிறை என்பது பலமுறை இலங்கை வானொலியின் அறிவிப்பை 'கேட்டு' ஏற்பதாகவே இருந்ததும் உண்மை. ஊருக்கு ஒரு சில போன்கள் மட்டுமே அபூர்வமாக இருந்தபோதும் அவற்றினூடாகவும் பிறை பார்த்தலை கேட்டு உறுதி செய்து கொண்டுள்ளோம். நமதூர் ஆலிம்களின் மசூரா அடிப்படையிலான பிறை அறிவிப்பை மதுக்கூர், முத்துப்பேட்டை, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற நமது பக்கத்து ஊரார்களும் ஏற்று செயல்படுத்தி வந்தனர் என்பதும் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.

ஏன் அப்போது சர்ச்சைகள் எழவில்லையா? எழுந்தன, ஆனால் அவை ஏன் எங்கள் பகுதிக்கு நேரத்தோடு தகவல் சொல்லி அனுப்பவில்லை? ஏன் மிகத் தாமதமாக அறிவிக்கின்றீர்கள் என்ற அளவிலேயே இருந்தன என்றாலும் மக்கள் ஆலிம்களிம் பிறை தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அறிந்து ஒரேயொரு வருடம் மட்டும் தகவல் அறிவிப்பு அவர்களிடம் நேரத்திற்கு சொல்லப்படாத காரணத்தால் ஆலிம்களின் பிறை அறிவிப்பை சில தெருக்கள் மட்டும் ஏற்கவில்லை என்பதாக எங்கள் ஞாபகம். சர்ச்சைகள் எத்தனை எழுந்து அடங்கினாலும் அதிரைக்கு பெருநாள் தினம் என்பது ஒரே தினமாகத் தான் இருந்தது.

பல வருடங்கள் மக்கள் சுபுஹூக்குப்பின் காலை வேளையை அடைந்த நிலையில் வெளியூர்களில் பிறை பார்த்த நம்பகமாக செய்திகள் தாமதமாக கிடைத்து அதிரை ஆலிம்களால் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதற்கு அல்லாஹ்வின் அருளால் இன்னும் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வாழும் சாட்சி.

மேலும், தலைமை காஜி அல்லது மாவட்ட காஜி அல்லது டவுன் காஜி அல்லது உள்ளூர் காஜி என்பன போன்ற தமிழக அரசு ஊழியர்களின் அறிவிப்பின் அடிப்படையில் அதிரையில் பிறை அறிவிப்புகள் செய்யப்பட்டதே இல்லை என்பதையும் பிறை ஆலோசணை அமர்வுகளில் பங்கு கொண்டு வந்த, இன்னும் அல்லாஹ்வின் அருளால் ஹயாத்துடன் உள்ள ஆலிம்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். ஒருவேளை இத்தகவல் பிழையென்றால் எங்கள் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்.

அரசு காஜிகள், அமைப்பு காஜி, (அரசியல் கூட்டணி தர்ம) ஹிலால் கமிட்டி, அனைத்து தேசிய, மாநில இயக்கங்களின் பிறை அறிவிப்புகள், கணிப்புகள் போன்ற குழப்பங்கள் பெருகியுள்ள நிலையில் அவைகளின் அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், அதேவேளை இன்று தகவல் தொழிற்நுட்பங்கள் பெருகியுள்ள நிலையில், திறந்த மனதுடன் சர்வதேசப் பிறை முதல் உள்ளூர் பிறை வரை நாம் ஏற்று ஆலோசித்து அதிரையில் முன்பு அமல்படுத்தியவர்கள் என்ற கடந்த கால வரலாற்றை மீண்டும் நம்மால் செயல்படுத்திட இயலும் என்ற இறை சார்ந்த நம்பிக்கை மேலோங்குவதாலும் அதிரை ஆலிம்கள் மீண்டும் அதிரைக்கான ஒரு பிறை கமிட்டியை ஏற்படுத்தி அதின் புற உறுப்பினர்களாக பள்ளிக்கு ஒருவரையும், உங்களோடு பிறை விஷயத்தில் ஒத்துவருகின்ற உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இடம் பெறச்செய்து, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் சர்வதேசம் முதல் உள்நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், உள்ளூர் என அனைத்து நம்பகத் தகவல்களையும் திறந்த மனதுடன் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆய்ந்த மசூரா முடிவினை அதிரைக்கான பிறை மற்றும் பெருநாளாக அறிவிக்க முன்வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.

இனியொரு முறை இயக்கங்களோ, காஜிகளோ, அரசோ நமது அதிரையின் பிறை நாட்களை தீர்மானிக்க நாம் இடமளிக்க வேண்டாம். பிறை பார்த்த, பார்த்ததை கேட்ட நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் நோன்பை நோற்கவும், பெருநாளை கொண்டாடவும் மீண்டும் அதிரையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் அதற்கு முன்முயற்சிகளை அதிரை ஆலிம்கள் இப்போதே துவங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

வரும் ஹஜ்ஜூப் பெருநாளாவது அதிரையர் அனைவரும் முன்பு போல் ஒரே நாளில் கொண்டாடிய பெருநாட்கள் போல் அமைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம்.

வேண்டுதல்: 
ஆலீம்களுடன் தொடர்புடைய உள்ளூர் சகோதரர்கள் இந்த வேண்டுகோளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இது பல நல்ல புரிந்துணர்வுகளுக்கு இனிய துவக்கமாய் அமையட்டும்.

இவண்
அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள்