அப்துல் கலாம் சிலை, நினைவிட விவகாரமும் முஸ்லீம் மற்றும் பிற மத சகோதர அமைப்புகள் முன்னுள்ள கடமைகளும்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் இந்திய மக்களின் இதயங்களில் வாழ்பவர், இந்தியாவை சர்வதேச அரங்கில் தலை நிமிர செய்தவர், தலைசிறந்த விஞ்ஞானி, மாணவர்களின் நாயகர், கல்வியின் தூதுவர் என எத்தனையோ சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே செல்லலாம். அவை காலத்தால் அழியாதவை.
இந்தியாவில் எத்தனையோ சிறப்பு வாய்ந்த தலைவர்களுக்கு அவர்களின் இறப்புக்குப் பின் சிலையும், நினைவிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன, அதற்கு அவர்கள் சார்ந்த ஜாதி மத கட்டமைப்பும், அவர்களின் நம்பிக்கையும் அதற்கு அனுமதிக்கின்றன.
அப்துல் கலாம் அவர்களுக்கு முன்னும் இரு இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்து மரணித்திருந்தாலும் அவர்களுக்கு இன்று வரை சிலைகள் இல்லை என்பதையும், அதற்காக இது வரை யாரும் கோரிக்கை எழுப்பவில்லை, போராடவில்லை என்பதையும் நடுநிலையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அப்துல் கலாம் அவர்கள் ஒரு முஸ்லிமாக பிறந்தவர், முஸ்லிம் என்ற நிலையிலேயே மரணித்தவர் என்பதை யாரும் மறுக்க மாட்டீர்கள் எனும் போது அவர் சார்ந்த மார்க்கம் (மதம்) அனுமதிக்காத, விரும்பாத ஒன்றை அவர் குடும்பத்தினரே அறியாமையினால் விரும்பினாலும் சிலையையும், நினைவிடத்தையும் எழுப்புவது முறையா? இவற்றை அவர் சார்ந்த சமூகமும், அதன் அமைப்புகளும் கண்டுகொள்ளாமல் இருப்பது நியாயமா?
கடந்த சுமார் ஒரு வருடமாக, சாதாரணமாக உள்ள அடக்கத்தலத்தால் அப்துல் கலாம் அவர்களின் சாதனைகளுக்கோ, புகழுக்கோ ஏதேனும் குறை எற்பட்டதா? இனி ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ள சிலையினாலோ, நினைவிடத்தாலோ அவருக்கு புதிதாக ஏதேனும் பெருமைகள் சேர்ந்து விடப்போகிறதா? பொதுமக்களின் அல்லது அவரது குடும்பத்தினரின் வாழ்வாதரத்தில் ஏதும் ஏற்றம் வந்துவிட போகிறதா?
எத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதராக இருந்தாலும் சரியே, வாழும் போதே மிக எளிமையான மனிதராக இருந்த ஒருவருடைய 6 அடி சமாதிக்காக பல ஏக்கர் நிலங்களை வீணடிப்பது அறிவுடைய செயலா? நியாயமா?
பொதுவாக தலைவர்களின் சிலைகள் காகங்களின் கழிப்பிடமாகவும், சிலைகள் அவமதிக்கப்பட்டுவிட்டன என்ற பெயரில் மனிதர்களின் மத்தியில் கலவரங்கள் ஏற்படவே உதவும் என்பது நடைமுறை நிஜமாகவும் இருக்கும் நிலையில், இஸ்லாம் விரும்பாத ஒன்றை பெரும்பாலான அரசியல் கட்சிகள் கோருவதையும், மத்திய ஆளும் கட்சி அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதையும் உடனே நிறுத்த வேண்டும்.
அப்துல் கலாம் அவர்களின் பெயரால் நடைபெறவுள்ள வீண் விரயங்கள் நிறுத்தப்படவும், சிலைக்காக செலவழிக்கப்பட உள்ள தொகையை அப்துல் கலாம் அவர்களின் பெயரில் ஏழை குழந்தைகளின் கல்வி உயர்வுக்காக செலவிடப்பட வேண்டும், இதற்காக முஸ்லீம் சமூகமும் அதன் அமைப்புகளும், தோழமை சகோதர மக்களும் உடன் கைகோர்த்து தண்டச் செலவுகளையும், வீண் வேலைகலையும் தடுக்க முன்வர வேண்டும்.
அவருடைய கல்லறையை அப்படியே விட்டு விடக்கோரியும், வரும் 2016 ஜூலை 27 அன்று மத்திய அரசு ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள சிலை, நினைவிட வேலைகளை நிறுத்த அனைவரும் ஜனநாயக வழியில் போராடி மத்திய அரசுக்கும், அரசியல் கட்சியினருக்கு புரிய வைக்க முன்வருமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
இறைவனின் பொறுப்பில் சென்றுவிட்ட ஒரு ஆத்மாவிற்கு, சர்வதேச தரத்தில் மட்டுமல்ல உள்ளூர் தரத்தில் கூட வேண்டாம் சிலை, வேண்டாம் நினைவிடம்.
No comments:
Post a Comment