அதிராம்பட்டினம் பேரூராட்சியின் துணைத் தலைவர் திரு பிச்சை அவர்களுக்கு
ஒரு திறந்த மடல்!
நான் பொருளாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டுவரும் சம்சுல் இஸ்லாம் சங்கமும் இதனைத்தான் விரும்புகின்றது என்பதற்கு, எங்களின் பல அமர்வுகளின்போது சங்கத் தலைவரிடமிருந்து பரிந்துரையாக வெளிப்பட்ட கருத்தும் இதுவே. நாங்கள் இதே கருத்தில் இருப்பதால்தான் உங்களைத் தெரிவு செய்வதில் ஒத்துழைப்பளித்தோம் என்பதை நீங்கள் புரிந்திருக்கலாம்.
நமதூரின் வலைத்தளங்களுள் ஒன்றான அதிரை பிபிசி உங்கள் தேர்வைத் தொடர்ந்து இவ்வாறு மகிழ்ச்சியுடன் குரிப்பிட்டிருந்த்தது: "நம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பேரூராட்சி மன்ற துணை தலைவர் தேர்தலில் மத நல்லிணக்கம் வென்றுவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் சங்கத்தை எதிர்த்தவர்கள் தோற்க்கடிக்கப்பட்டுவிட்டார்கள். இது சங்கங்களுக்கு கிடைத்த வெற்றி… "
துணைத் தலைவராகிய நீங்கள் தமிழகத்தின் ஆளும் கட்சியையும், தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் தமிழகத்தின் முன்னாள் ஆளும் கட்சியையும் சேர்ந்தவர்களாக இருக்கலாம். ஆனால், ஊர் நலம் என்று வரும்போது, இருவரும் இணைந்து செயல்படுவதே அறிவுடைமையாகும். அதை விடுத்து, ‘விட்டேனா பார்!’ எனும் போட்டி மனப்பான்மையைக் கையில் எடுத்துக்கொண்டு அதிரை வலைத்தளங்களுக்குப் பேட்டியளிப்பதும் பேசுவதும் நமதூரின் பாரம்பரியமான ஒற்றுமைக்குக் குந்தகம் விளைப்பதாகும் என்பதை நீங்கள் நான் கூறித் தெரிய வேண்டியதில்லை.
மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல், வெற்றி பெற்றவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு உங்கள் கட்சியில் தஞ்சம் புகுந்துகொண்ட சிலர் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துகின்றார்களோ என்ற ஐயமும் எமக்கு ஏற்படுகின்றது. எது எப்படி இருந்தாலும், நமதூரின் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இந்தத் திறந்த மடலின் நோக்கம்.
பேரூராட்சித் தலைவர் தமிழகத்தின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவராக இருப்பதால், துணைத்தலைவர் ஆளும் கட்சிக்காரராக இருப்பது, உள்ளூர்த் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான அரசின் ஒத்துழைப்பைப் பெற உதவியாக இருக்கும் என்ற நற்சிந்தனையாலும், பொதுநல நோக்காலும்தான் உங்களைத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க நடுநிலையாளர்கள் பாடுபட்டனர் என்பதை மறந்துவிடாதீர்கள்! பேரூராட்சித் தலைவருடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய நீங்கள், ‘வைத்தேன், எடுத்தேன்’ என்று பேட்டிகளும் விமரிசனங்களும் கொடுப்பது அறிவுடைமையாகாது.
பொறுப்புகளும் பதவிகளும் வரலாம், போகலாம். ஆனால், மனிதம் பேணப்பட வேண்டும். மத நல்லிணக்கம் நிலவ வேண்டும். அதிராம்பட்டினம் அமைதிப் பூங்காவாகத் திகழ வேண்டும் என்பதே எமது விருப்பம்.
அதற்கு வல்ல இறைவன் துணை நிர்ப்பானாக!
By
Adirai Ahmed
No comments:
Post a Comment