உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, September 22, 2015

அதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்...



அதிரையில் கடந்த பல்லாண்டு காலமாக குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலின் அடிப்படையில் பெருநாள் தொழுகைகளை திடல்களில் ஏற்பாடு செய்து நடத்தி வரும் 'ஈத் கமிட்டி' எதிர்வரும் ஹஜ் பெருநாள் தொழுகையையும் மைதானத்தில் நடாத்திட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்து வருவதுடன், தொழுகை நேரம் சம்பந்தமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 24.09.2015 வியாழன் அன்று காலை மிகத்துல்லியமாக 7.30 மணியளவில், குத்பா பள்ளி அருகே கீழத்தெரு பகுதியில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான மைதானத்தில் 'தியாகத் திருநாள் திடல் தொழுகை' நடைபெறும். (கடந்த நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்ற அதே மைதானம்)

மிக முக்கிய அறிவிப்பு:
அறிவித்துள்ளபடி மிக மிகத் துல்லியமாக காலை 7.30 மணிக்கு தொழுகை துவங்கிவிடும் என்பதால் 7 மணிக்கெல்லாம் மைதானத்திற்கு வந்துவிடுமாறும், யாருக்காகவும் எதற்காகவும் தொழுகை தாமதப்படுத்தப்படாது என்பதால் குறித்த நேரத்திற்குள் வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
 
அழைப்பின் மகிழ்வில்...
ஈத் கமிட்டி
அதிரை


Monday, September 21, 2015

அதிரையில் ஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - அனைத்து சமய நல்லிணக்க விழா !

கடந்த வருடங்களை போல் இந்த வருடமும் அதிரை ஈத் மிலன் கமிட்டியின் சார்பில் எதிர்வரும் 27-09-2015 அன்று காலை 10.30 மணியளவில் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் அனைத்து சமுதாய பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் பெருநாள் சந்திப்பு - சமய நல்லிணக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் பல்வேறுதுறைகளை சேர்ந்த கல்வியாளர்கள் - சமூக நல்லிணக்கவாதிகள் - ஜமாத்தார்கள் - கிராம பஞ்சாயத்தர்கள் - மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்ள இருக்கும் சமூக நல்லிணக்க விழாவில் தாங்கள் கலந்துகொள்வதுடன் தங்களுக்கு அறிமுகமான அனைத்து அன்பர்களையும் அழைத்துவர அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
அதிரை ஈத் மிலன் கமிட்டி, அதிரை

இது தொடர்பாக அதிரை ஈத்மிலன் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பில் கூறியிருப்பதாவது:
 

Thursday, September 17, 2015

சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் சில வாட்ஸ்அப் கலகல கற்பனை

ஹரப்பா, மொகஞ்சதாரோவை விடுங்கள்.. நம்மூர் நாகரீகம் எப்படிப்பட்டது தெரியுமா? வாட்ஸ்அப் கலகல
 
சென்னை: வாட்ஸ்சப்பில் தற்போது வைரலாக சுற்றிவரும் ஒரு மெசேஜ் சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதாக உள்ளது. அந்த தகவலை பாருங்கள்!
 
ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகத்தை தொல்பொருள் ஆராய்ச்சியால் கண்டறிவது போல், தற்போதைய நம்மூரு நாகரிகத்தை, அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்படும் வரலாறு எப்படிப் புரிந்துகொள்ளும் என சிந்தித்துப் பார்த்ததில் இருந்து சில சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் கற்பனை.
 
பொதுச் சொத்துக்களை கொள்ளையடிக்கும் உரிமை அரசாங்கத்திடமே இருந்திருக்கிறது. அப்படி கொள்ளையடிக்க விருப்பமுள்ளவர்களை தேர்வு செய்யும் பொறுப்பு மட்டும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அவரவர்க்கென தனித்தனி சின்னங்களும் வண்ணக் கொடிகளும் இருந்திருக்கின்றன!
 
வாகனப் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டிருக்கிறது. அரசு பேருந்துகளின் படிக்கட்டுகளில் ஊஞ்சலாடியபடி இனிதே பயணிக்கும் முறை இருந்திருக்கிறது. நடத்துநர் என்றழைக்கப்பட்டவர், விசில் என்ற இசைக் கருவியை இசைப்பதில் தேர்ச்சி பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது இசைக்கேற்ப பேருந்துகள் பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டபடி இயங்கியிருக்கின்றன! 
 
சமையல் செய்வதற்கென மிக்ஸி, கிரைண்டர் போன்ற சாதனங்களைப் பயன்படுத்தியுள்ளனர். நீர் அருந்தப் பயன்படுத்திய பிளாஸ்டிக்கிலான பாட்டில் முதல், மிக்ஸி கிரைண்டர் வரை அனைத்திலும் ஒரு பெண்மணியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த உபகரணங்கள் அனைத்தையும் கண்டுபிடித்ததன் காரணமாக அவரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்! 
 
பொதுமக்களில் வயதால் மூத்தவர்கள் மட்டுமே அரசியல் தலைவர்களாக உருவாகியிருக்கிறார்கள். அந்த அரசியல் தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஊரெங்கும் சுவர்களில் அவர்களின் பெயர்களையும் உருவத்தையும் வரைந்து, மறக்காமல் அவர்களின் முதுமையை குறிக்கும்வகையில் ‘வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்! 
 
பிளெக்ஸ்கள், பிளாஸ்டிக்குகள் போன்றவை அக்காலத்தில் நிறைய பயன்படுத்தப்பட்டுள்ளன. டன் கணக்கில் தயாரிக்கப்பட்ட அவை மண்ணில் மக்காமல் கிடந்து உலகின் அழிவுக்கே காரணமாக இருந்திருக்கின்றன. 
 
பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதற்காக குட்டிக் குட்டி கழிப்பறைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டப்பட்டுள்ளன. அவை தவிர, நகரின் முக்கிய வீதிகளில் மூத்திரச் சந்து என்ற திறந்தவெளிப் பகுதியில், எவ்வித நெருக்கடியுமில்லாமல் சிறுநீர் கழிக்கும் வசதி செய்து தந்திருக்கிறார்கள். அப்படி சிறுநீர் கழிக்கும் போது வேடிக்கை பார்ப்பதற்காக கவர்ச்சிப் பட சுவரொட்டிகளை மூத்திரச் சந்தின் சுவரெங்கும் ஒட்டும் முறையும் கையாளப்பட்டிருக்கிறது! 
 
சாலைகளனைத்தும் கருங்கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. அந்த கருங்கற்களின் மீது, பயணிப்பவர்களை காத்து கருப்பு அண்டக் கூடாதென்பதற்காக தார் என்ற கறுப்பு பொருளை லேசாக தெளித்து வைக்கும் சாஸ்திரம் கடைபிடிக்கப்பட்டுள்ளது! 
 
ஒரு பக்கம் பசுமையான விவசாய வியாபாரம் அமோகமாக நடந்து வந்திருக்கிறது. இன்னொரு பக்கத்தில் விவசாய நிலங்களை பல வண்ணங்களில் அழகுபடுத்தி விவசாய நில வியாபாரமும் அமோகமாக நடந்து வந்திருக்கிறது! விவசாய நிலங்களில் வீடு கட்டி, மொட்டை மாடிகளில் தொட்டிச் செடிகளில் விவசாயம் செய்யும் அதிநவீன விவசாயத்தையும் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்! 
 
ஏரிகள் என்ற பெயரிலான அபாயகரமான நீர் நிறைந்த பள்ளத்தாக்குகளை மேடாக்கி வீடுகள் கட்டவும், அந்த வீடுகள் கட்டும் கற்களுக்காக, மலைகள் என்றழைக்கப்பட்ட மேடான பகுதியை வெட்டியெடுத்து சமப்படுத்துவதும் நடந்து வந்திருக்கிறது! 
 
மக்களின் பொழுதுபோக்குக்காக செல்வந்தர்களால் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகள், உருண்டையான பந்து என்ற ஆயுதத்தாலும், பேட் என்றழைக்கப்பட்ட மரத்தினால் செய்யப்பட்ட ஆயுதத்தாலும் மோதிக்கொள்ளும் விளையாட்டு நடைமுறையிலிருந்தது. அவர்களில் யார் ஜெயிப்பார்கள் தோற்பார்களென பந்தயம் கட்டும் முறையும் இருந்து வந்திருக்கிறது! இவ்வாறு செல்கிறது அந்த வாட்ஸ்சப் மெசேஜ்.

News Source: http://tamil.oneindia.com/news/tamilnadu/whatsapp-message-regarding-tamil-culture-235833.html

17.09.2015 துபையில் இன்று சிறப்புரை "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்"

அன்பார்ந்த யுஏஇ வாழ் சகோதரர்களுக்கு 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்....

மதுக்கூர் தவ்ஹீத் தர்மஅறக்கட்டளையின் ( MTCT) துபை மண்டலம் சார்பாக, இன்ஷாஅல்லாஹ் இன்று (வியாழன் 17th Sep' 2015) இஷாவுக்குப்பின் மெளலவி T.முஹம்மது நாசர்   அவர்கள் "அல்லாஹ்வின் அருளை விட்டும் தூரமாக்கும் செயல்கள்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.

சத்திய இஸ்லாத்தை சரியாக அறிந்து கொள்வோம்.மனித சமூகத்திற்கு படைத்த இறைவனால் வகுக்கப்பட்ட வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து அதன்படி செயற்பட அன்புடன் அழைக்கும்

For Madukkur Thowheed Charitable Trust


Tuesday, September 15, 2015

மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் தள்ளிவைப்பு: ADT அறிவிப்பு

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

எதிர்வரும் 18.09.2015 அன்று மாலை மஃரிப் தொழுகையை தொடர்ந்து, அதிரை தக்வா பள்ளி அருகே மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரை நிகழ்த்தயிருந்த 'சமூக தீமைகள் எதிர்ப்பு' பொதுக்கூட்டம், பதட்டம் நிறைந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதை காரணம் காட்டி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்ததாலும், தொடர்ந்து புனித ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட உள்ளதாலும் அக்டோபர் மாதத்திற்கு பொதுக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ், அக்டோபரில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

எனினும் முன்னர் அறிவித்தபடியே, இன்ஷா அல்லாஹ் 18.09.2015 வெள்ளி அன்று ALM ஸ்கூல் பள்ளிவாசலில் நிகழும் ஜூம்ஆவில் மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் 'குத்பா பேருரை' நிகழ்த்துவார்கள்.

மேலும், 18.09.2015 வெள்ளி அன்று அஸர் தொழுகையை தொடர்ந்து, பிலால் நகர் தர்பியா சென்டரில் நடைபெறும் பெண்களுக்கான வாராந்திர அமர்வில் 'சிறப்பு சொற்பொழிவு' ஆற்றவுள்ளார்கள். 

சொற்பொழிவுக்குப்பின் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெறும். கேள்வி கேட்பதற்கு அனைத்து மதரஸா மாணவிகளுக்கும் முன்னுரிமை தரப்படும் என அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Monday, September 14, 2015

18.09.2015 வெள்ளியன்று அதிரையில் மவ்லவி. அப்பாஸ் அலி அவர்களின் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

இன்ஷா அல்லாஹ் அதிரையில்,

மாபெரும் சமூக தீமைகள் எதிர்ப்பு பொதுக்கூட்டம்


ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:90 & 5:91)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மாண்பும் வலிவுமிக்க அல்லாஹ் கூறினான்: என் அடியான் ஒரு நன்மையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் இருந்துவிட்டாலும் அதை அவனுக்கு ஒரு நன்மையாகவே நான் பதிவு செய்வேன். (எண்ணியபடி) அந்த நன்மையை அவன் செய்து முடித்தால் அதை நான் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகளாகப் பதிவு செய்வேன். அவன் ஒரு தீமையைச் செய்ய எண்ணினான்; ஆனால், அதைச் செய்யவில்லை என்றால், அதை நான் ஒரு குற்றமாகப் பதிவு செய்வதில்லை. (எண்ணியபடி) அவன் அந்தத் தீமையைச் செய்து முடித்துவிட்டால் அதை ஒரேயொரு குற்றமாகவே நான் பதிவு செய்வேன். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லீம் : 204)

நாள்: எதிர்வரும் 18.09.2015 வெள்ளிக்கிழமை

நேரம்: மஃரிப் தொழுகையை தொடர்ந்து உடன் ஆரம்பமாகும்

இடம்: தக்வா பள்ளி அருகில்


சிறப்புரை:
மவ்லவி. அப்பாஸ் அலி Misc. அவர்கள்

நிகழ்ச்சி ஏற்பாடு
அதிரை தாருத் தவ்ஹீத்
அதிராம்பட்டினம்

தொடர்புக்கு: 9597841980 & 90031 27748

கூடுதல் தகவல்:
மவ்லவி. அப்பாஸ் அலி அவர்கள் 18.09.2015 அன்று ALM ஸ்கூல் பள்ளிவாசலில் நடைபெறும் ஜூம்ஆவில் 'குத்பா பேருரை' நிகழ்த்தவுள்ளார்கள்.

Wednesday, September 9, 2015

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி: ஓர் அரசியல் வரலாற்று பார்வை

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு கணக்குப்படி இன்னும் சுமார் 8 மாதங்களே உள்ள நிலையில் அதன் குளிர் காய்ச்சல் அனைத்து கட்சிகளையுமே பற்றிக் கொண்டுள்ளதை பார்த்து வருகிறோம். 

இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குள் ஓர் ஊராய் அடங்கிப்போயுள்ள 'நம்ம அதிராம்பட்டிணம்' சுதந்திர இந்தியாவில் சுமார் 10 வருடங்கள், முதல் சட்டமன்ற தேர்தல் நடந்த ஆண்டான 1952 முதல் 1962 வரை நடைபெற்ற 3 சட்டமன்ற தேர்தல்களில் தனித் தொகுதியாக திகழ்ந்து 3 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளது. 

1967 ஆம் ஆண்டு முதல் மறுவரையரை செய்யப்பட்ட பட்டுக்கோட்டை தொகுதியின் ஓர் பகுதியாய் அதிராம்பட்டிணம் இன்றும் இருந்து வருகிறது. அதேசமயம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியும் 1952 முதல் இருந்து வருகிறது.

1980களின் இறுதிவரை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் பிரதான கட்சியினர் அனைவரும் அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதியை மீண்டும் கொண்டு வர பாடுபடுவோம் என வாக்குறுதி அளித்து வந்தனர். காலப்போக்கில் வாக்குறுதி தந்தவர்களும் மறந்தனர், தேர்தலுக்கு தேர்தல் இதே வாக்குறுதியை கேட்டுக் கொண்டிருந்த மக்களும் மறந்தனர்.

அதேபோல், சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற முதல் பாராளுமன்ற தேர்தல் நடந்த ஆண்டான 1951 முதல் 2004 வரை புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியின் ஒரு அங்கமாகவும், தொகுதி மறுசீரமைப்பு மூலம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் முதல் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் ஒரு அங்கமாகவும் அதிராம்பட்டிணம் இருந்து வருகிறது.

கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம்:
முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக வாழும் அதிராம்பட்டிணம் வாக்காளர்கள் தான் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கி வருகின்றனர் என்றாலும் அதிராம்பட்டிணம் தனித்தொகுதியாக இருந்தபோதும் சரி பின்பு பட்டுக்கோட்டையுடன் இணைக்கப்பட்ட பின்பும் சரி, எந்த ஒரு பிரதான கட்சியும் இதுவரை முஸ்லீம்களை வேட்பாளராக நிறுத்தியதே இல்லை.
-------------------------------------------------------------------------
 
குறிப்பு:
இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் இந்திய அரசினரால் நடத்தப்பட்ட பொதுத்தேர்தல்கள் குறித்து மட்டுமே இங்கு அலசப்படுகிறது மாறாக 1920 முதல் நடைபெற்று வந்த மதராஸ் மாகாண கவுன்சில் தேர்தல்கள் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நடத்தப்பட்டு வந்ததும், பின்பு கவுன்சிலுக்கு பதிலாக 1937 முதல் ஆங்கிலேய அரசால் நடத்தப்பட்ட மதராஸ் மாகாண சட்டமன்ற தேர்தல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. 

மதராஸ் மாகாண சட்டமன்ற தேர்தல்: மொத்த தொகுதிகள்: 375

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி:

1952 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற முதலாவது சட்டமன்ற உறுப்பினர் எஸ். வெங்கடராம ஐயர் - இந்திய தேசிய காங்கிரஸ்
 
எதிர்த்து தோல்வியுற்றவர் கே. முத்தையா - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
 
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ராஜாஜி என்கிற ராஜகோபாலச்சாரியார்
--------------------------------------------------------------------------------
 
இடையில், 1953 ஆம் ஆண்டு, அக்டோபர் 1 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் தனியாகவும், இன்றைய கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் அன்றைய மைசூர் மாகாணத்துடனும் இணைந்ததாலும், 1956 ஆம் ஆண்டு, நவம்பர் 1 ஆம் தேதி மதராஸூடன் இருந்த மலபார் மாவட்டம் கேரளாவுடன் சேர்க்கப்பட்டு பதிலாக கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை தாலுக்காவும் மதராஸூடன் இணைக்கப்பட்டதாலும் மதராஸ் மாகாணம் 'மதராஸ் மாநிலம்' ஆனது.
--------------------------------------------------------------------------------
 
மதராஸ் மாநில சட்டமன்ற தேர்தல்: மொத்த தொகுதிகள்: 205 

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி: 

1957 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற 2வது சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். மாரிமுத்து – பிரஜா சோஷியலிஸ்ட் பார்ட்டி

எதிர்த்து தோல்வியுற்றவர் என். சுந்தரேச தேவர் - இந்திய தேசிய காங்கிரஸ்
 
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமராஜர்
---------------------------------------------------------------------------------
 
இடையில், 1959 ஆம் ஆண்டு, ஆந்திரா மாநிலத்திலிருந்து 1 தொகுதி திரும்பப் பெறப்பட்டு மதராஸ் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
---------------------------------------------------------------------------------
 
மதராஸ் மாநில சட்டமன்ற தேர்தல்: மொத்த தொகுதிகள்: 206

அதிராம்பட்டிணம் சட்டமன்ற தொகுதி:
 

1962 ஆம் ஆண்டு வெற்றிபெற்ற 3வது சட்டமன்ற உறுப்பினர் தண்டாயுதபாணி பிள்ளை – இந்திய தேசிய காங்கிரஸ்
 
எதிர்த்து தோல்வியுற்றவர் ஏ.ஆர். மாரிமுத்து – பிரஜா சோஷியலிஸ்ட் பார்ட்டி
 
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் காமராஜர்
----------------------------------------------------------------------------------
 
மேற்காணும் இதே வருடங்களில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்:
 
1952: நாடிமுத்து பிள்ளை - இந்திய தேசிய காங்கிரஸ்

1957: ஆர். சீனிவாச ஐயர் - இந்திய தேசிய காங்கிரஸ்

1962: வி. அருணாச்சல தேவர் - திராவிட முன்னேற்றக் கழகம்
---------------------------------------------------------------
 
1967 ஆம் ஆண்டு முதல் தொகுதி மறுசீரமைப்பு மூலம் அதிராம்பட்டிணமும் பட்டுக்கோட்டையும் ஒரே தொகுதியாக மாற்றப்பட்டும், தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 234 ஆக உயர்த்தப்பட்டும் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.

2009 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீரமைப்பிலும் அதிராம்பட்டிணம் பட்டுக்கோட்டை தொகுதியிலேயே தொடர்ந்தது மேலும் 234 என்ற மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையிலும் மாற்றம் செய்யப்படவில்லை.

1967 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடித்த திரு. சி.என். அண்ணாதுரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு மதராஸ் மாநிலம் என்றிருந்த பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்தது.
---------------------------------------------------------------
 
1967 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு நடப்பு சட்டமன்றம் வரை பட்டுக்கோட்டை தொகுதியில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல்:

1967: ஏ.ஆர்.மாரிமுத்து – பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில சட்டமன்றம் என பெயர் மாற்றம் பெற்று தேர்தல் நடைபெற்று வருகிறது.

1971: ஏ.ஆர்.மாரிமுத்து – பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி
1977: ஏ.ஆர்.மாரிமுத்து – இந்திய தேசிய காங்கிரஸ்
1980: எஸ்.டி.சோமசுந்தரம் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1984: பி.என்.ராமச்சந்திரன் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989: கே.அண்ணாதுரை – திராவிட முன்னேற்றக் கழகம்
1991: கே.பாலசுப்பிரமணியன் – அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996: பி.பாலசுப்பிரமணியன் – திராவிட முன்னேற்றக் கழகம்
2001: என்.ஆர்.ரங்கராஜன் – தமிழ் மாநில காங்கிரஸ்
2006: என்.ஆர்.ரங்கராஜன் – இந்திய தேசிய காங்கிரஸ்
2011: என்.ஆர்.ரங்கராஜன் – இந்திய தேசிய காங்கிரஸ்
------------------------------------------------------------------
 
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஜெயித்தவர்கள்:
 
புதுக்கோட்டை பாராளுமன்ற தொகுதியின் கீழ்:
1951: கே.எம்.வல்லத்தரசு – கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி
1957: எப்.ராமநாதன் செட்டியார் - இந்திய தேசிய காங்கிரஸ்
1962: ஆர்.உமாநாத் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1967: ஆர்.உமாநாத் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
1971: கே.வீரையா – திராவிட முன்னேற்றக் கழகம்
1977: வி.எஸ்.இளஞ்செழியன் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1980: வி.என்.சுவாமிநாதன் - இந்திய தேசிய காங்கிரஸ் (இந்திரா)
1984: என்.சுந்தர்ராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1989: என்.சுந்தர்ராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1991: என்.சுந்தர்ராஜ் - இந்திய தேசிய காங்கிரஸ்
1996: என்.சிவா – திராவிட முன்னேற்றக் கழகம்
1998: ராஜா பரமசிவம் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1999: எஸ்.திருநாவுக்கரசு – எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2004: எஸ்.ரகுபதி - திராவிட முன்னேற்றக் கழகம்
 
தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியின் கீழ்:
2009: எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம்
2014: கே.பரசுராமன் - அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
-----------------------------------------------------------
 
இதற்கு மேல் பொறுமை இழப்பீர்கள் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்கின்றோம்.
 
தொகுப்பு:
அதிரை அமீன்
அப்துல் காதர்

Monday, September 7, 2015

அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' N.K.S.அப்துல் ரஜாக்

இன்று 'சமூக புற்றுநோய் கிருமிகள்' எல்லாம் 'சமூக ஆர்வலர்'களாகவும், தனது கைத்தடி என்பதற்காகவே இப்படிப்பட்ட நச்சுக் கிருமிகளுக்கு குடை பிடித்து தனது பொறுப்புக்கும் பதவிக்கும் இழுக்கை தேடிக்கொள்பவர்களும் இருந்து கொண்டுள்ள இதே அதிரையில் தான் பல நன்மக்களும் மறைந்தும் வாழ்ந்து கொண்டுள்ளனர். அப்படிப்பட்ட அதிரையின் மாணிக்கங்களுள் ஒருவராக, 'கௌரவ மாஜிஸ்திரேட்' பதவி வகித்த மர்ஹூம் N.K.S. அப்துல் ரஜாக் அவர்களைப் பற்றி மிகச்சில விஷயங்களையாவது இன்றைய தலைமுறையினர் தெரிந்து வைத்திருத்தல் நல்லது. 



N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் ஒரு மிராசுதாராக, தேங்காய் மொத்த வியாபாரியாக, ஒரு அரசியல்வாதியாக, சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத்தின் முதல் தலைவராக, கவுன்சிலராக, அரசாங்க 'கௌரவ மாஜிஸ்திரேட்'டாக, அதற்கும் மேலே மனிதநேய நிறைகுடமாய் திகழ்ந்துள்ளார்கள்.

தான் கௌரவ மாஜிஸ்திரேட்டாக இருந்தபொழுது நீதிபதிகள் தீர்ப்பளிப்பதற்கு சிறுபான்மையினர் பிரச்சனைகளில் கருத்து மற்றும் நல் ஆலோசணைகளை வழங்கி உதவுவதுடன், அரசுப்பணிகளில் சேர்வதற்கு ஏதுவாக பலரும் நன்மையடையும் வகையில் நற்சான்று / சிபாரிசு கடிதங்களை நாடிவந்தோருக்கு வழங்கியுள்ளார்கள். அவர்களுடைய சிபாரிசின் அடிப்படையில் 1954 ஆம் ஆண்டு அரசாங்க வேலையில் சேர்ந்த ஒருவர் தான் மர்ஹூம் K.S.M. இஸ்மாயில் மாமா அவர்கள். 



பட்டுக்கோட்டையில் தற்பொழுது புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடம் முன்பு குளமாக இருந்ததும், MGR அவர்களுடைய ஆட்சி காலத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும், வருவாய்துறை அமைச்சராகவும் இருந்த திரு எஸ்.டி. சோமசுந்தரம் அவர்களின் முயற்சியால் குளம் தூர்க்கப்பட்டு பேருந்து நிலையம் கட்டப்பட்டது ஆனால் இந்த குளத்தை வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வந்தது N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தான்.

ஒருமுறை ஆந்திர மாநிலத்திலிருந்து பஞ்சம் பிழைக்கவந்த 'ஒட்டர்' இன மக்கள் கூட்டமாக பட்டுக்கோட்டையில் தங்கியிருக்க, அவர்களை பற்றி விசாரித்த N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தனது சொந்த செலவில் குளத்தை வெட்டுமாறு பணிக்க, உருவானது தான் 'தலையாரி குளம்'. பல வருடங்கள் மக்கள் குளிக்கப் பயன்பட்ட இந்தக்குளம் காலப்போக்கில் இன்று அதிரையின் "புதுக்குளம்" உள்ள நிலையை தலையாரி குளமும் அடைந்து நாறியது பொதுமக்களின் பொறுப்பற்றத்தனத்தால் விளைந்த விளைவே.

N.K.S. அப்துல் ரஜாக் அவர்கள் தான் அதிரை நகர காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தபொழுதே நேர்மையாளர்கள் கோஷ்டி அரசியலில் நீடிக்க முடியாது என்பதை உணர்ந்து பதவியையும் கட்சியையும் உதறித் தள்ளினார்கள்.

குடும்பம் குறித்த சிறுகுறிப்பு (நாங்கள் அறிந்த வரையில்):

1980 ஆம் ஆண்டு வஃபாத்தான அப்துல் ரஜாக் அவர்களுக்கு தாஜூதீன், சர்புதீன், இக்பால் என 3 ஆண் வாரிசுகளும், 2 பெண் வாரிசுகளும் உள்ளனர்.

ஆண் வாரிசுகள் வழிப்பேரர்கள் சபீர் (பட்டுக்கோட்டை ஒன்றிய முன்னாள் திமுக இளைஞரணி அமைப்பாளர்), அப்துல் ரஜாக், ரியாஸ் அகமது, அகமது அஜீம், நஸீர் அகமது ஆகியோர்களுடன், 

பெண் வாரிசுகள் வழிப்பேரர்கள் தான் டாக்டர் அப்துல் ஹக்கீம், பசுலுதீன், சேக்காதி, அஹமது கபீர், தவ்பீக் ஆகியோர்கள் என்பதும் கூடுதல் தகவல்.

புகைப்படங்கள், ஆவண நகல்கள் மற்றும் குறிப்புகள் வழங்கியோர்:
1. முஹமது யாக்கூப் (K.S.M. இஸ்மாயில் மாமா மகனார்)
2. N.K.S. சபீர்



ஆக்கம்:
S. அப்துல் காதர்
அதிரை அமீன்

Sunday, September 6, 2015

ஜிஹாத் என்றால் என்ன ? சுவாமிஜி ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்களின் விளக்கம்..!


அனைத்து சமயங்களும் நல்லதைத்தான் போதிக்கின்றன. ஆனால், அது கயவர்களின் கைகளில் மாட்டி கொள்ளும் போது தான் மனிதனின் பலகினத்தை பயன்படுத்தி அவனை மதம் என்ற போர்வையில் மாய்த்து அப்பாவி மக்களை ஏவி விட்டு சுகம் காண்கின்றனர். இருந்தாலும் சில நல்ல பெரியவர்கள், மத குருமார்கள் மக்களை பண்படுத்த செய்கிறார்கள். அப்படி ஒரு நல்ல சமூக நல்லிணக்கத்தை எதிர்பார்த்து தன் உரையை எடுத்துரைக்கும் அந்த மரியாதைக்குரிய சுவாமிஜி பெரியவரின் பெயர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்.

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி கருத்துரையை வழங்கினார்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹாபாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி, விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர். நானும் கூட கூட்டத்தில் முன்பு பேசியிருக்கிறேன். 'ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான். என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் எக்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?

(போர் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனங்களை விளக்கி அது எந்த காலத்தில் யாருக்கு அருளப்பட்டது என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கும் ஆதாரங்களை வைக்கிறார்)

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தோழர் அக்ரம் பாய் அவரது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அவ்வாறு நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார். அருகில் அக்ரமுடைய வீடு. அக்ரமை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். எனது நிலையைப் பார்த்து அக்ரம் பதறி விட்டார். 'என்ன ஆனது' என்று கேட்டார். 'உனது தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் நான் இந்து என்பதால் என் மீது எச்சிலை துப்பி விட்டார்' என்றேன். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்றவர்களால்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இது போன்ற ஆட்கள் இந்துக்களிலும் இருக்கிறர்கள், முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். நான் முன்பு அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஒரு வரலாற்று சம்பவத்தை படித்தேன். அதாவது இநதுக்கள் முஸ்லிம்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றியதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது பொய்யான வரலாற்று திரிபு என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன்.

ஆனால் என் மேல் எச்சில் துப்பிய அந்த நபரின் செயலைப் பார்த்து அலாவுதீன் கில்ஜி கண்டிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றியிருப்பார் என்று முன்பு நினைத்து கொண்டேன். குர்ஆனின் கட்டளைகளை படித்தவுடன் இதன் சட்டங்களுக்கும் இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப் பட்டுள்ளேன்.

இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்.. என்று தனது உரையை முடித்து கூடியிருந்த அனைத்து மக்களின் மனங்களையும் கவர்ந்தார்.

உலக நாடுகளையே ஆச்சரியம் பட வைக்கும் நாடு நம் இந்திய நாடு, வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற தத்துவத்தை முன் நிறுத்தி மனித நேயத்தை காக்க வேண்டும்

என்பது தான் ஒரு நல்ல மனித பிறவியின் எண்ணமாக இருக்க வேண்டும், மக்களை பிரிக்கும் எந்த சூழ்ச்சியிலும் மாய்ந்து விடாமல் சிந்தித்து நியாயத்தின் பக்கமே இருக்க வேண்டும் மனிதனுக்காகவே மதம், மதத்திற்காக மனிதன் இல்லை என்பது இந்த கட்டுரையின் நோக்கம் இந்த சுவாமிஜி போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள் இப்படி மக்களை நல்வழிபடுத்தி பண்படுதுவோமானால் நம் இந்தியாவை எந்த சக்திகளாலும் பிரிக்க முடியாது.
 
Regards
Sathishkumar

"The future belongs to those who believe in the beauty of their dreams"
 
 
08.01.2013 அன்று, 
 
 
என்ற இந்த குழுமத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட கட்டூரையை நன்றியுடன் மீள்பதிவு செய்துள்ளோம்.

Wednesday, September 2, 2015

04.09.2015 அன்று துபையில் மௌலவி. அப்துல் பாஸித் புஹாரி வழங்கும் மார்க்க விளக்க சொற்பொழிவு

                                                                                        
--
அன்புடன்,
தவ்ஹீத் இல்லம் தஃவா குழு,
டெய்ரா, துபை
Tel: 00971 4 2981931