உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, June 19, 2014

அதிரை இளைஞர்களுக்கு பிரபல எழுத்தாளார் இப்ராஹிம் அன்சாரி வைக்கும் அன்பான வேண்டுகோள் !

திரை நியூஸின் அன்பான வாசகர்ககளுக்கு நமதூர் பிரபல எழுத்தாளார் இப்ராஹிம் அன்சாரி அவர்களால் தீட்டப்பட்ட இந்த தலையங்கத்தை வாசிக்கும் முன்பாக அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பை ஒரு முறை கீழ்கண்ட சுட்டியின் இணைப்பில் உள்ள பதிவுகளை வாசித்துக்கொள்ள வேண்டுகிறோம்.

'அதிரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த காலங்களில் நிகழ்ந்த கொடூர விபத்துகளின் தொகுப்பு !'


ஈசிஆரில் ( E C R )  எந்நாளும் விபத்துக்கள் !
ஒரு காலத்தில் இராஜாமடம் வெங்கட்ராமன் தமிழ்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது தம்பிக்கோட்டை முக்கூட்டுச் சாலை யிலிருந்து நியாயமாக  அதிராம்பட்டினம் வழியாக வரவேண்டிய சேது ரோட்டின் ரூட்டை மாற்றி பட்டுக் கோட்டை வழியாக திசை திருப்பி பின் சேதுபாவா சத்திரத்தில் அதை இணைக்கச் செய்தார் என்று கூறுவார்கள். இதனால் போக்குவரத்து வசதிகள் இல்லாமையால்  அதிராம்பட்டினம் பொருளாதார ரீதியில் வணிக வளர்ச்சி இல்லாத ஊராகப் போய் பட்டுக் கோட்டையை சார்ந்தே நிற்கவேண்டிய நிலைமைக்கு ஆளானது. 
 
அதன்பின் பல ஆண்டுகள் காத்திருந்த பிறகு இ சி ஆர்  என்கிற நாடு தழுவிய ப்ராஜக்ட்  போடப்பட்டபோது அந்த சாலை அதிராம்பட்டினம் வழியாகச் செல்லும் என்கிற  செய்தி கேட்டு  மகிழாத மனங்களே இருக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு காலத்தில் இராமநாதபுரம், கீழக்கரை போன்ற ஊர்களுக்குச் செல்லவேண்டுமானால் காரைக்குடி எல்லாம் சுற்றி ஆறிலிருந்து எட்டு மணிநேரம் செலவழித்த காலமெல்லாம் போய் மூன்று மணி நேரத்தில் ஆனந்தமாக கடற்கரைக் காற்றை சுவாசித்துக் கொண்டே  போகும் காலம் ஏற்பட்டுள்ளது. .  கேட்க ஆளின்றி கிடந்த இ சி ஆர் பகுதிகளை ஒட்டி  இருந்த  அநாதை நிலங்கள் எல்லாம் இன்று இமாலய விலைக்கு ஏறி வீட்டு மனைபோட்டு  விற்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி துறை முகத்திலிருந்து கண்டெய்னர் லாரிகள் சென்னை வரை செல்ல வேண்டுமானால் அவை அதிரை வழியாக செல்வது சிக்கனமாக முடியுமென்பதாலும் திருவனந்தபுரம் பகுதிகள் வழியாக கேரளத்திலிருந்து  தர்ஹா சுற்றுலா வரும் பேருந்துகள் யாவும் அதிரையைக் கடந்தே செல்வதாலும்  அரவமின்றிக் கிடந்த அதிரைப் பகுதியில்  அர்த்த ராத்திரியில் கூட வாகனங்கள் வரிசையாகச் செல்ல ஆரம்பித்தன. இத்தகைய வாகன ஓட்டிகளும் அவற்றில் பயணிப்பவர்களும் அதிரையில் வாகனங்களை நிறுத்துவதன் காரணமாக புதிய புதிய உணவு விடுதிகளும் கணிசமான வியாபார வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளதையும் நாம் மறுக்க இயலாது. அத்துடன்    அதிரையின் திசைக்கொருபக்கம் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப பெட்ரோல் பங்குகளும் தோன்றி ஊரின் வளர்ச்சியைப் பார்க்க  ஒருவகையில் மகிழ்வாகத்தான் இருக்கிறது.
 
அதே நேரத்தில்  ஊரிலும் சுற்று வட்டார கிராமங்களிலும் கூட ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியால் இரண்டு,  மூன்று,  நான்கு சக்கர  வண்டிகளின் எண்ணிக்கையும் கணக்கின்றிப் பெருத்துவிட்டன; இன்னும் பெருகி வருகின்றன. அடுத்தவீட்டுக்குப் போவதானாலும் கூட ஆட்டோவைக் கூப்பிடும் கலாச்சாரம் மேலாங்கி வருகிறது. படிக்கிற  பிள்ளைகளும் வெளிநாடுகளில் இருந்து பத்து நாள் விடுமுறையில் வருபவர்களும் கூட இரு சக்கர வாகனங்கள் வாங்கிப் பயன்படுத்துவதை ஒரு பெருமையாகவும் கலாச்சாரமாகவுமாக ஆக்கிவிட்டார்கள்.
இத்தகைய வாகனங்களின் எண்ணிக்கையின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் விதத்தில் உள்ளூருக்குள் செல்லும் சாலை வசதிகள் பெருகவில்லை என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
அத்துடன் நெருக்கடியான நேரங்களில் சாலை  ஓரங்களில் காய்கறி முதல் வடை,  வாடா,  சுண்டல் விற்கும் கடைகளும் பெருகிவிட்டன. வேலையற்றவர்கள் கூட்டமாகக்  கூடி நின்று கொண்டு  சாலைகளை மறைத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசும் இடங்களாகவும் சாலைகள் ஆகிவிட்டன. இன்றைய நிலையில் நமது ஊருக்கு மட்டுமென்று  ஒரு மக்கள் தொகை கணக்கு எடுப்போமானால் ஒப்பிடும்போது,   ஒரு நபருக்கு ஒரு நாய் வீதம் தெருவில் அலைகின்றன. நாய்களுடன் போட்டி போட்டுக் கொண்டு கட்டிப் போடவும் கவனிக்கவும் ஆளின்றி ஆடு மாடுகளும் அலைந்து கொண்டு இருக்கின்றன. முன்பெல்லாம் இப்படி அத்துமீறி அலையும் ஆடுமாடுகளை அடைக்க பழஞ்செட்டித் தெருவில்  பவுண்டு இருந்தது. இப்போது அந்தப் பவுண்டு ஒரு நினைவுச் சின்னமாகிவிட்டது. . போதாக்குறைக்கு வீடுகட்டுபவர்கள் தங்களின் கட்டிடப் பொருள்களான செங்கல், ஜல்லி, மணல் ஆகியவைகளை கொட்டி வைத்து  சாலைகளை கணிசமாக ஆக்கிரமிக்கிறார்கள். சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் சாக்கடைகளும்   .   தங்களுக்குரிய பங்கை செவ்வனே செய்து வருகின்றன. ஊரின் எல்லைகள் அனைத்திலும் கொடி கட்டிப் பறக்கும் சாராய சாம்ராஜ்யமும் தனது கோர முகத்தை காட்டி வருகின்றன.
மிகவும் வேதனையான விஷயம் என்ன வென்றால் குழந்தைகளை இருசக்கர வாகனங்களின் முன்னாள் நிற்கவைத்து அல்லது எரிபொருள் டாங்க் மீது உட்காரவைத்து  அவர்களிடம் வண்டியை ஆன் செய்யவும் ஆப் செய்யவும் சொல்லிக் கொடுப்பது   அல்லது ஹாரன் அடிக்கச் சொல்லிக் கொடுத்து மகிழ்வது போன்ற அற்ப சந்தோஷத்தின் விலை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும் சில சமயங்களின் அந்த இளம் பிஞ்சுகளின் உயிராகவும் இருக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்,   பொதுவாக அதிரையில்,  குறிப்பாக இ சி ஆர்  - ல் ஒரு நாளைக்கு ஒரு விபத்தாவது நடந்து விடுகிறது. இங்கு தரப்பட்டுள்ள இணைப்புக்களை இதய வலிமை உள்ளவர்கள் மட்டும் பார்க்கவும்.
இந்த விபத்துக்கள் பல நேரங்களில் கோர விபத்துக்களாகி ஒரு சில உயிர்களைப் பலி கொண்டு விடுகின்றன; பலரை ஊனமுற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன . அண்மைக் காலத்தில் பல வாழவேண்டிய இளைஞர்கள்  சாலை விபத்துக்களில் அகால மரணத்தைத் தழுவினார்கள்’ கை கால்களை இழந்தார்கள். வெளியூர்களில் இருந்து சுற்றுலா வந்தவர்கள் குடும்பத்துடன் கோரமாக  நடு ரோட்டில் நசுங்கிக் கிடந்தார்கள். இலட்சக் கணக்கான பணமதிப்புள்ள வாகனங்கள் குப்புறக் கவிழ்ந்து குப்பை மேடாக காட்சி தந்தன.
ஒரு புறம் வளர்ச்சி! மறு புறம் அழிவு! இப்படி வளர்ச்சியும் தளர்ச்சியும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு ஊரை சீரழிக்கவா புதிய புதிய போக்குவரத்து வசதிகள் வேண்டுமென்று கேட்டோம்? இ சி ஆர்  வந்த பிறகே இவ்வளாவு விபத்துக்கள் என்றால் தவறு இ சி ஆரைக்   கொண்டு வந்தவர்கள் மீதா ? அல்லது அதைப் பயன்படுத்தத் தெரியாமல் பயன்படுத்தி பரிதாபமாக சாகக் கூடாத நேரத்தில் சாகத் தயாராகும் நம் மீதா ?
ஒரு பத்திரிகையில் படித்தேன்.
ஒரு அமெரிக்கரும், ஒரு இங்கிலாந்து நாட்டவரும், ஒரு இந்தியரும் பேசிக்கொண்டார்கள். அமெரிக்கர் சொன்னார், “ எங்கள் நாட்டில் வாகனங்கள் வலது புறமாகச் செல்லும்” . இங்கிலாந்துக் காரர் சொன்னார், “ எங்கள் ஊரில் இடது புறமாகச் செல்லும்” . இந்தியர் கடைசியாக சிரித்துக் கொண்டே சொன்னார், “ எங்கள் ஊரில் இடைவெளி இருக்குமிடமெல்லாம் செல்லும் ”.
சாலைப்பயணம் என்பது மரணத்தை முன்னிருக்கையில் அமரவைத்துச் செல்வது போலாகிவிட்டது. . வாகனப் பயணத்தில்  எப்போது எந்த ரூபத்தில் விபத்து நடக்குமென்று  அறியமுடியாத சூழல் நிலவுகிறது.
இந்திய சாலைகளில் மட்டுமே சுமார் மூன்று இலட்சம் விபத்துகள் வருடம் தோறும் நிகழ்கின்றன. எண்பதாயிரம் உயிர்களைக் கொல்லும் இந்த சாலை விபத்துகள் மூலம் ஆண்டுக்கு மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய் இழப்பும் ஏற்படுகின்றது என்பது அதிர்ச்சியளிக்கிறது. சாலைகளைப் பயன்படுத்துவோரின் அலட்சியமே தொன்னூறு விழுக்காடு விபத்துகளுக்குக் காரணமாகிறது என்று இந்தியாவிலும், உலக அளவிலும் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் இத்தகைய சாலை விபத்துக்களில் அறுபத்தாறு சதவீதம் மதுவைக் குடித்து விட்டு வண்டி ஒட்டுவதாலும் முப்பது சதவீதம் தொலைபேசியில் பேசிக் கொண்டு வண்டி ஒட்டுவதாலும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.
அனைவரும் யோசிக்க வேண்டும். ; சிந்தித்துப் பார்க்க வேண்டும். சாலைபாதுகாப்பு விதிகள் சரியாகப் பயன் படுத்தப் படுகின்றனவா ? ஒரு வண்டியில் அனுமதித்த அளவுக்கு மட்டும் ஆட்கள் ஏறிச் செல்கின்றனரா ? சாலை ஓரங்களில் ஏன் இத்தனை ஆக்கிரமிப்புகள்? கைகளைக் கோர்த்துக் கொண்டு நடுச் சாலைகளில் இரண்டு மூன்று இரு சக்கர வண்டிகளை இளைஞர்கள் கூக்குரலிட்டு  கும்மாளமிட்டுக் கொண்டு ஓட்டும்போது கரணம் தப்பினால் மரணம் என்பது அவர்களுக்கு மறந்து போய்விட்டதா? இப்படிப்பட்ட இளைஞர்களின் கோரிக்கைக்கும் கண்ணீருக்கும்  பதில் கொடுத்து அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கித்தரும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்டிக்கும் சக்தியை இழந்துவிட்டார்களா ? அல்லது பெற்றோரறி மதிக்கும் பழக்கம் மரணித்துவிட்டதா ? மறு உலகம் போவதற்கு  அதிவேகத்தில் செல்லும் இளைஞர்கள் இந்த உலகத்தில் உள்ள ஒரு இடத்துக்கு சற்று தாமதமாகச் சென்றால் யார் குடி முழுகிவிடும் ?
வளரும் இளைஞர்களுக்கு இதன் மூலம் வைக்க விரும்பும் வேண்டுகோள் இவைதான்.
சாலை விதிகளை மதித்து உங்கள் உயிர்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ள உங்களுக்கே உதவிக் கொள்ளுங்கள். பிறப்பவர்கள் இறப்பது இயற்கை ஆனால் அந்த இறப்பைத் தேடி நீங்களே வலியப்  போக எத்தனிக்காதீர்கள்.. “ இளம் கன்று பயமறியாது ” என்றும் “ கல்லைத் தின்றால் செறிக்கிற வயது “  என்றும் உங்களை உசுப்பிவிடும்  சில  பழமொழிகளை  உங்களைக் கெடுப்பதற்காகவே சொல்லி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள் என்பதை உணருங்கள். நில்! கவனி! செல்! என்கிற புதிய பழமொழியை நினைவில் கொள்ளுங்கள். !  உங்களை நம்பி - நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்று உங்களுக்கு வாகனம் வாங்கித்தந்த உங்கள் பெற்றவர்களின் கனவை உங்களின் சாலைவிதிகளை மீறிய போக்குகளால் தரைமட்டமாக்கி விடாதீர்கள்.
உங்களது உற்சாகத்தை உங்கள் வண்டியின் ஆக்சிலேட்டரில் காட்டாதீர்கள் ; உங்களின் மார்க் சீட்டுகளில் காட்டுங்கள்.   முக்கியமாக நீங்கள் ஓட்டும் வண்டியின் பெட்ரோல் செலவை நீங்கள் உங்கள் உழைப்பின் மூலம் செய்யவில்லை . எங்கோ பாலைவனத்தில் கூலித் தொழிலாளியாக வியர்வை வடிக்கும் உங்கள் தகப்பனின் வியர்வைத்துளிகளே உங்களின் வண்டிகளில் பெட்ரோலாக ஊற்றப்படுகிறது என்று எண்ணிக் கொள்ளுங்கள். வெளியே போன நீங்கள் வீடு வந்து சேரும்வரை உங்களின் தாய்மார்கள் இன்னொரு பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்  என்றும்  எண்ணிக் கொள்ளுங்கள்.
காவல்துறை நண்பர்களின் கண்காணிப்பு சாலை விபத்துக்களைத் தடுப்பதில் இன்றியமையாததாக இருக்கிறது. நிச்சயமாக இது அவர்களின் கடமை என்றாலும் கூட நாமும் நினைவூட்ட வேண்டி இருக்கிறது. டாடா ஆஸ் போன்ற வாகனங்களில் கூட்டமாக வேலையாட்களை ஏற்றிச் செல்வது, லோடு லாரிகளின் மீது  ஏற்றப்பட்ட மூட்டைகள் மீது  லோடு மேன்கள் ஏறி உட்கார்ந்து செல்வது, இருவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட  இரு சக்கர வண்டிகளில் மூன்று நான்கு பேர்கள் ஏறிப் போவது, ஆட்டோவில் ஓட்டுனருக்கு அருகில் இடைச் சொருகலாக ஒருக்கணித்து ஒருவர் உட்கார அனுமதிப்பது ஆகிய அத்துமீறல்கள்  காவல்துறை உடனே கண்காணிக்க வேண்டியவைகளாகும். மேலும் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை கைது செய்து அவர்களின் உரிமத்தை ரத்து செய்வது, உரிமமே இல்லாமல் இரண்டு சக்கர மற்றும் கார்களை ஓட்டுபவர்களை தடுத்து வழக்குப் பதிவு செய்வது, ஓவர் ஸ்பீடில் செல்பவர்களின் உரிமத்தை ரத்து செய்வது  போன்ற நடவடிக்கைகளில் காவல்துறையும் அவர்களது பணிகளுக்குள்ள கடமை விதிகளை  கண்டிப்பாக செயல்படுத்த  இறங்க வேண்டும்.
சாலை  விதிகளை மதிப்போம் ! நமது உயிர்களைக் காத்துக் கொள்வோம். !

இப்ராஹிம் அன்சாரி
தொடர்புக்கு: ebrahim.ans8@gmail.com
 
Thanks to new source: 
http://www.adirainews.net/2014/06/blog-post_6826.html

Tuesday, June 3, 2014

ஆஹா! ஞாபகம் வந்துருச்சி!! அதிரையினுள் பின்னோக்கி ஓர் பயணம் (புகைப்பட உலா)

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

அனுபவ அறிஞர்களே... எஞ்சோட்டு செட்டுகளே... இளவயசு மொட்டுகளே... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

எங்கள் இளம்பிராய நினைவுகள் உங்கள் மனப்பதிவுக்காக சில படத்துளிகளாய்...

ஒவ்வொரு ஊரும் ஒரு வரலாற்று பெட்டகம் அதில் நம் அதிரையும் ஒன்று என்பதை எத்தனை பேர் இன்னும் மறக்காமல் உள்ளோம் அல்லது இளந்தலைமுறைக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம் என்ற பிரயாசையின் வெளிப்பாடே இப்புகைப்படத் இத்தொகுப்பு!

வாங்க! நேற்றைய அதிரையை சும்மா சுத்தி பாத்துட்டு திரும்புவோம்!!


அதிரையின் மைந்தர்கள் கனவிலும் நினைவிலும் மறக்கக்கூடாத மனிதருள் மாணிக்கம், வள்ளல், கல்வித் தந்தை சேக் ஜலாலுதீன் அப்பா அவர்களுக்காக ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தவர்களாக உள்நுழைவோம் வாருங்கள்....

ஆரம்பத்தில் கனரா பேங்க் இயங்கிய கட்டிடம் (மீராசா டாக்டர் கிளினிக் எதிர்புறம்) இதற்கப்புறம் தான் வான்பரீதா பில்டிங் மற்றும் இப்போதைய இடம்

உச்சி வெயில் நேரத்தில் சின்ன ஓய்வு
ஒரு நேரத்துல நமதூரின் பிசியான அச்சகங்களாக செயல்பட்ட ABC பிரிண்டர்ஸ் மற்றும் ரமானுஜம் அச்சகம் இன்றும் தன்னம்பிக்கையோடு தாக்குப்பிடித்து கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டுள்ளன


நம்ம ஊருக்குள்ளும் விவசாயம் நடந்துருக்குங்க! சானா வயல், சவுக்குக் கொல்லை, இன்றைய MSM நகர் ஏரியான்னு நம்ம ஊரின் உள்ளும் புறமும் நடந்த விவசாய பூமி எல்லாம் பொண்ணுக்கு வீடு என்ற வரதட்சணை கொள்ளையாலே கான்கிரீட் காடுகளா போச்சுங்க! (விவசாயத்துக்கு தண்ணியில்லைங்கிறது இன்னொரு காரணம்)

மேலத்தெருவில் முதன்முதலில் பர்மா தேக்கு கொண்டு கட்டப்பட்ட முதல் மெத்தை வீடும் அதன் இன்றைய மிச்சங்களும் (குட்டப்புறா வீடு)

இன்றைக்கும் மட்டப்பா வீடு என்று அழைக்கப்படும் பழைய மாடி வீட்டின் எஞ்சிய சுவர் (மேலத்தெரு)


அன்னாள் நமதூர் KMC கல்லூரி மாணவர்களின் NCC படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த சுவர் இன்று பயனற்று போய் நிற்கிறது (செடியன்குளம் இறக்கம்)

நமதூர் ரயில்வே ஸ்டேசனை ஒட்டியுள்ள லெவல் கிராஸிங்கை தாண்டினால் 50 மீட்டர் தொலைவில் ஒரு பிரமாண்ட தகரக் கொட்டகை  இருந்ததுங்க! இதை கஸ்டம்ஸ் ஆபிஸ், சால்ட் ஆபீஸ் என்று சொல்லுவாங்க எது சரின்னு தெரியல ஆனா காலப்போக்குல நம்மூரு ஆளுங்க காத்து வாங்க தான் பயன்பட்டுச்சு, தகர கட்டிடத்தை தேடிப்போன எனக்கு இந்த திறந்தவெளிதாங்க தென்பட்டுச்சு. எந்த பழைய இரும்பு வியாபாரி எடுத்துட்டு போனாருன்னு தெரியல!

அந்த நாளாயிலே கால்நடையா நம்ம வூரு கடற்கரைக்கு போனவங்க கண்டிப்பா இந்தப் பாலத்துல உக்காந்து இளைப்பாரம போயிருக்க மாட்டாங்க.



ஒரு காலத்துல உப்பளங்கள் நிறைந்த ஊருங்க, இப்ப ஏதோ கொஞ்சம் பாக்கியிருக்கு இவைகளும் இரால் பண்ணைகளாக மாறுமுன் நம் எதிர்கால தலைமுறைக்கு புகைப்படமாய் காட்ட சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

சுனாமிலேயும் மாறாதது நம்ம வூரு சேத்துக் கடலுங்க, நாங்களும் இந்த சேத்து கடல்ல கூட்டாளிகளோட வரிமட்டி புடிச்சி வெளையாண்டுருக்கோம்ல. (நம்ம பக்கத்து கிராமம் கீழத்தோட்டத்துல சுனாமி அலைகள் மணலை கொண்டு வந்து வெளியே தள்ளி அழகிய பீச்சாக மாத்திட்டு போச்சுங்க)

ஒரு காலத்துல குளியல் துறையா இருந்த காலேஜ் மூணு கண்ணு பாலம் இப்படி புதர் மண்டி கிடக்கிறது மனச பிசையுதுங்க!


ராஜாமடம் ரோடு (மகிழங்கோட்டை) முன்னாள் ரயில்வே ஸ்டேசன்
நம்ம ஊருல ரயில் காணப்போயி கொஞ்ச நாள் தான் ஆவுது ஆனா அதுக்கு முன்பே நம்ம பக்கத்து கிராமங்களின் ரயில்வே ஸ்டேசன்களே காணமப்போனது எத்தன பேருக்கு தெரியும்?

அதிரைக்கும் முத்துப்பேட்டைக்கும் இடையிலே மஞ்சவயல், தம்பிக்கோட்டை, சுந்தரம், மறவக்காடுன்னு பல ஸ்டேசன்கள் இருந்துச்சுங்க, அதே மாதிரி அதிரைக்கும் பட்டுக்கோட்டைக்கும் இடையிலே (மகிழங்கோட்டையில்) ராஜாமடம் ரோடு ஸ்டேசன் இருந்ததுங்க, இந்த ரயிலடிலேருந்து மேலத்தெரு கீழத்தெரு மக்கள் அதிகமா முத்துப்பேட்டைக்கு பயணம் செஞ்சிருக்காங்க! அதன் இன்றைய மிச்சம் இது!

CMP வாய்க்காலில் மகிழங்கோட்டை லெவல் கிராஸிங் அருகேயுள்ள ஒற்றை நாவல் மரம் 

நம்ம ஊரு CMP வாய்க்காலில் தண்ணி வந்த காலத்துல இருபுறமும் 50க்கு மேற்பட்ட நாவல் மரங்கள் காய்த்து குலுங்கின, அதில் ஏறி பறிக்கவும், பொறுக்கவும் பல தடவை போய் வந்த எங்கள் இளவயது கால்கள் இன்று எத்தன மரங்கள் மிச்சமிருக்குன்னு தேடிப்போய் ஏமாந்ததை என்னான்னு சொல்றது!


CPM லேன் VKM ஸ்டோர் அருகேயுள்ள கிணறு ஒரு காலத்துல குடிநீர் துறைய ஜொலிச்சதுங்க ஆனா இப்ப?????

அழிவின் விழிம்பில் உள்ள அழிஞ்சி மரமும் பழமும்
அதிரையர் சீண்டாத இந்த அழிஞ்சிப்பழங்கள மூட்டை மூட்டையாய் பறித்து சென்னையில் விற்று சம்பாதித்த ஆங்கிலப்பா என்ற அன்றைய இளைஞரின் திறமையை கண்டு இன்றும் வியக்கேன்.

அன்றைய சிறுவர்கள் தெருவொர கபுருகளுக்கு கந்தூரி கூடு செய்ய, பள்ளி விடுமுறை நாட்களில் சர்பத் கடைகள், சிறிய மிட்டாய்கள் கடைகள் போட, விளையாட்டு குடிசைகள் போட இந்த அழிஞ்சி மர போத்துகளை தாங்க வெட்டிக்கிட்டு போவாங்க!


லெட்சோட்டை /  லெட்சகொட்டை
கிலுவை
முள்ளு முருங்கை 
(இந்த ஒத்த மரத்தை தவிர வேறு எதுவும் என் கண்ணுல படல)
வேலிகளே சுற்றுச்சுவர்களாய் இருந்த காலத்துல பார்த்த மரங்கள இனி அருங்காட்சியகத்துல கூட பார்க்க முடியாத நிலமை. காசும் கட்டடங்களும் வந்த பின்ன ஒரு புகைப்படம் எடுக்க வேலி காத்த மரங்கள தேடியலஞ்சத நெனச்சா... என்னாத்த போங்க!

மேலத்தெரு சைடு மரைக்கா குள கரையில இருந்த குடிநீர் கிணறு இது, இதுவும் காலப்போக்குல தூர்ந்து குப்பை மேடாகிடுச்சி.

அந்த காலத்துல தென்னந்தோப்புகளுக்குள்ள இருந்த குடிநீர் கிணறுகளில் ஒரு குடம் நல்ல தண்ணி அள்ளனும்னா ஒரு கொடம் மரைக்கா குளத்து தண்ணிய கொண்டு போய் தென்னமரத்து தூர்ல ஊத்தனுமுங்க! இலவச மின்சாரம் இல்லாத நாளுங்க அதெல்லாம்.

சரியா இந்த எடத்துல நியூ சினிமாங்கிற பேர்ல இங்கே ஒரு டூரிங் டாக்கீஸ் கொட்டாய் 5 வருசம் இருந்ததுங்க! அப்ப நம்ம பிலால் நகரு பேரு நண்டு வெட்டி வெப்பலுங்க!

நம்ம வூருக்குள்ள கீஸ் என்கிற கேரிபேக் நுழையுறதுக்கு முன்னாலே இந்த தாழைமர இலைகளில் செய்யிற உமல் பை தான் மீனு, காய்கறி வாங்க முழு அதிரையும் பயன்படுத்துனுச்சி அதுபோல இறைச்சியை பச்சை பனை ஓலையிலே மடிச்சி தருவாங்க, அந்த இயற்கை சுகாதாரங்கள் இப்ப இல்ல.

சேர்மன் அய்யா இந்த பழக்கத்த மீண்டும் நடமுறைக்கு கொண்டு வரனும், செய்வாரா?

அஜீஸ் அப்பா வைத்திருக்கும் பனை ஓலை விசிறியும் அந்தக்கால கல்லாப்பெட்டியும் அதிரையிலிருந்து மறைந்து எத்தனை வருடங்களாகி விட்டன. வாழ்க அந்த உடும்புப்பிடி உத்தமர்.

இந்த 88 வயசு இளைஞர் அப்துல் அஜீஸ் அப்பாவுக்கு அன்னைக்கும் இன்னைக்கும் அதே தொழில் தான், உமல், தேங்காய், நாட்டு முட்டை என தளராத நம்பிக்கை! அந்த உயரமான ஊதா தொப்பி மட்டும் மிஸ்ஸிங்!

இந்த இடத்துல தான் சிறுவர்களின் நாவில் நிறைந்த ஜமால் ஐஸ் கம்பெனி இயங்கியது

கூடு இருக்கு ஆனா சிட்டுக்குருவி எங்கே? கண்ணுக்தெரிந்த அழிவு!


இது ஒரு காலத்துல பேருல மட்டும் ரோடு இருந்த சேதுரோடுங்க! இப்போ ECR ரோடு இருக்கு சேது தான் போன இடம் தெரியல.

அதிகாலை 5 மணி, காலை 8 மணி, பகல் 1 மணி, மாலை 6 மணி மற்றும் இரவு 9 மணி என தவறாமல் தினமும் 5 முறை முழங்கிய சங்கிற்கே சங்கு ஊதியாகிவிட்டது, இனி அது காட்சிப் பொருள் மட்டுமே.

அதோ நடுவுல அந்த ஆட்டோ தெரியுற எடத்துல தாங்க அண்ணா சிலை ஒண்ணு ரோட்டுக்கு நடுவுல இருந்தது, அவர சுத்தி இருந்த கட்சிக் கொடி கம்பங்கள்லாம் ரோட்டோரம் ஒதுங்கிக் கொள்ள அவர் போன எடந்தாங்க தெரியல, அதுவும் நல்லது தான்.



அறந்தாங்கிலிருந்து வந்த என் நண்பர் ஒருத்தரு 'பவித்ரா திருமண மண்டபம்' பக்கத்துல வெயிட் பண்றதா சொல்ல பேந்த பேந்த முழுச்சிக்கிட்டு போய் தேடுனா அட நம்ம 'ஜக்கரியா தியேட்டரு' புது அவதாரம் எடுத்தது அப்பதான் தெரிஞ்சது.

சுரைக்கா கொல்லை, சால்ட் லேன் எதிரேயிருந்த போலீஸ் காலனி கிரவுண்ட் முக்கால்வாசி வீடாக மீதம் கால்வாசி இப்படி கம்பி வேலிக்குள் சிறைவாசியாக, இமாம் ஷhபி பள்ளி மாணவ சிறுவர்களாய் பலமுறை கால்பந்து விளையாடியது மட்டும் இன்னும் பசுமையான நினைவில்.


சுரைக்கா கொல்லையில் செயல்பட்ட, அந்த மஞ்சள் நிற தொடர் கட்டிடமாக இருந்த சால்ட் ஆபீஸ தேடிப்போன எங்களுக்கு இந்த காலி மனையும் அறிவிப்பு பலகையுமே அதன் முந்தைய இருப்பின் சாட்சிகளாக தென்பட்டன.

இப்ப மக்தூம் பள்ளி இருக்கிற எடத்துல தான் நம்ம ஊரு ரிஜிஸ்டர் ஆபீஸ் இருந்ததுங்க மேலும் அதன் வாசல்ல இருந்த  முரட்டு பலா மரம் அந்த இடத்துக்கே அப்படி ஒரு அழகுங்க!

இந்த சந்துக்குள்ள தாங்க நம்ம ஊரு வானிலை ஆராய்ச்சி மையம் இருந்தது மேலும் கடலைமிட்டாய் கம்பெனி ஒன்றும் செயல்பட்டு வந்தது (80 காசு கொடுத்து ஒரு பாக்கெட் கடலை மிட்டாய் வாங்கின அதில 120 காசுக்கு இருக்கும், கடலை மிட்டாய் ஒன்று 5 காசுங்க)

இது பேரு தொட்டி அதாவது ஆட்டுத் தொட்டிங்க, ஆடு மாடுகள் நம்ம ஊரு வயல்ல போய் மேய்ந்தால் வயல்காரன் ஆட்டை பிடித்துக் கொண்டு வந்து இந்த ஜெயில்ல விட்டுட்டு போயிடுவாரு அப்புறமா ஆட்டுக்காரங்க ஆட்டை ஊரேல்லாம் தேடிட்டு கடைசிய இங்க வந்து பார்த்த உள்ளே நம்ம ஆடும் இலை மேஞ்சுகிட்டு நிக்கும் அப்புறம் என்ன எத்தன நாளு ஆடு உள்ளே இருந்துச்சோ அத்தன நாளுக்குன்னு கணக்கு பண்ணி தெண்டம் கொடுத்துட்டு ஆட்ட கூட்டிக்கிட்டு போயிரலாமுங்க!

இன்னைக்கு காய்கறிகடையாகவும், இட்லிக்கடையாகவும் தெரியுற இந்த கட்டடத்துக்குள்ள தாங்க நம்ம ஹனீப் டாக்டர் ஆரம்ப நிலையில கிளினிக் நடத்துனாங்க, எந்த நேரத்துலயும் ஓடி வந்து உதவிய அவரையும் அவரது அன்றைய நர்ஸ்களையும் இன்றைக்கும் நன்றியோட நினைக்கிறோமுங்க!

இந்த வணிக வளாகம் இருந்த எடத்துல தாங்க நம்மவூரு பெரிய போஸ்ட் ஆபீஸ் இருந்தது (நம்ம மக்கள் இன்னும் மறக்காம பழைய போஸ்ட் ஆபீஸ் தெருன்னு சொல்றது ஆறுதலான விஷயங்க) மேலும் இதன் சைடுல தான் குதிரை வண்டி ஸ்டாண்ட் இருந்தது, ஆட்டோக்கள் அதிரைக்குள் தலைகாட்டிய கொஞ்ச நாளிலேயே குதிரை வண்டித் தொழில் கூண்டோடு நொடிச்சுப் போச்சுங்க!

அரைக்கிடா, அத்தாஸூ, சாகுல் ஹமீது, ஐத்துருஸ், அத்தாஸூ மகன் என பலர் இங்கே குதிரை வண்டி ஓட்டிகளாக அதிரையர்களுக்கு சேவை செய்துள்ளனர்.

துருக்கி தொப்பி, மலேசியா தொப்பி, மாப்ள தொப்பி, துணி தொப்பி, மதரஸா தொப்பி என வகை வகையா தயாரிச்சு ஊருக்கே தொப்பி போட்டு அழகு பாத்தவரு கடையின் இன்றைய நிலை!

வெளிநாடுவாழ் நெசவுத்தெரு முஹல்லாவாசிகளின் தூய எண்ணத்தால் உருவான அதிரையின் முதற் சங்க கட்டிடம். இன்றைக்கும் சென்று போன அந்த நன்மக்களின் கனவை நிறைவேற்றிக் கொண்டு கம்பீரமாக உள்ளது.

இளம் வயதில் நம்ம மார்க்கெட்டுக்கு மீனு வாங்க போனவங்க மனசுல இன்னும் மறையாம இருக்கிற அந்த பழமையான கிணத்து மேல தானுங்க இந்த வாட்டர் டேங்கும் பைப்பும் இருக்கு!

தனிப்பட்ட ஓருவரின் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட மோதல் மேலத்தெருவுக்கும் கரையூர் தெருவினருக்கும் இடையே கலவரமாக, விளைவு காவல்துறையினர் கண்மூடித்தனமாக சுட கீழத்தெருவை சேர்ந்த சகோதரன் நூருல் ஹசன் ஷஹீதாக்கப்பட்டான்.

தவறிய இன்னொரு குண்டில் சிதறிய தக்வா பள்ளியின் சுவர் காவல்துறையின் காட்டு தர்பாரை இன்னும் இரத்த சாட்சியாய் சொல்லிக் கொண்டுள்ளது.

(இந்தியன் பேங்க் அருகில், இமாம் ஷhபி பள்ளியின் பின்புறம்)
நம்ம ஊருல 40 வருடங்களுக்கு முன் மருத்துவ சேவை செய்த இக்ராம் டாக்டர் இந்த ஏரியாவுல தாங்க இருந்தாரு, இன்னும் எத்தன பேரு அவர ஞாபகத்தில வச்சிருக்கோம்? 

ஆரம்ப இமாம் ஷhபி நர்சரி & பிரைமரி ஸ்கூல் இந்த வீட்ல தாங்க துவங்கியது (இந்த பச்ச பயிண்ட் வீடு பழைய வீட இருக்கும் போது) கிட்டங்கி தெரு பள்ளிக்கூடம் தொறந்து எங்களுக்கெல்லாம் அறிவொளி தந்த குழந்தை சேக்காதி அவர்கள் கொஞ்ச காலத்திற்கு முன் தான் காலமானாங்க, இன்னாலில்லாஹி வ இன்னஇலைஹி ராஜிவூன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமையில் சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கின்றோம்.

கீழத்தெரு புதுக்குடியில் இயங்கிய 'நங்கூரம் மார்க்' சேமியா கம்பெனி இன்று வீடாக, இது கயிற்றுக்கடை ரஜாக் அவர்களின் சொந்தக் கம்பெனி

மேலத்தெரு காவண்ணா அவர்கள் சொந்தமாக நடத்திய 'காவண்ணா ஆயில் பார் சோப்' கம்பெனியும் இன்று வீடாக மாறிவிட்டது.

கடைத்தெருவில் காவண்ணா அவர்கள் நடத்திய ஹோட்டல் (ரொட்டிக்கடை) அந்தக் காலத்தில் ஆட்டுக்கால் பாயாவுக்கு மிகவும் புகழ்பெற்றது.

400 ஆண்டுகால குத்பா பள்ளியில் தொழுத அனுபவமும் அதன் கட்டமைப்பும் இன்னும் கண்ணுள்ளே குளிர்ச்சியாய், இப்பள்ளியை நிர்மாணித்த மகுதூம் சின்ன லெப்பை ஆலிம் செய்கு அப்துல் காதிர் அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயரிய சொர்க்கத்தை வழங்குவானாக!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஏமாற்றம், ஏன்?

இன்னும் உண்டு ஏராளம் என்றாலும் எல்லாவற்றை என் ஓருவனால் மட்டும் கணக்கிட முடியாது மேலும் என் விடுமுறையும் அதை அனுமதிக்காது என்பதால் நீங்கள் ஓவ்வொருவரும் தங்களுடைய அனுபவ நினைவலைகளை இன்றைய இளைய அதிரையர்களுடன் பகிர்ந்து கொள்ள முன் வர வேண்டும் என்ற வேண்டுகோளுடனும் பகீர்விர்கள் என்ற நன்நம்பிக்கையுடனும் நிறைவு செய்கிறேன்.

ஜமால் மற்றும் ஹாரித் ஒத்துழைப்புடன்
அதிரைஅமீன்