உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Monday, December 30, 2013

புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்

http://www.islamkalvi.com/portal/?p=50840

எழுதியவர்/பதிந்தவர்/உரை
puttandu
நாளை செவ்வாய்க்கிழமை இரவு 12 மணியுடன் 2013 நிறைவடைந்து 01-01-2014 புது வருடம் பிறக்கின்றது.

புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?.

தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதே! என்று கவலைப்பட்டு, அதைப் பின்னோக்கிப்பார்த்து தனது கடந்த வருடத்தின் குறை நிறைகளை சரி செய்து அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்ற ஒரு அடியானாக தன்னை எவ்வாறு மாற்றிக்கொள்வது என்பதைப் பற்றி சிந்திப்பவனே உண்மையான புத்திசாலியாக இருக்க முடியும்.

இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரிய எழுச்சியையும், புரட்சியையும் ஏற்படுத்திய ஹிஜ்ரத் எனும் வரலாற்று சிறப்பு மிகு பயணத்தை வைத்துத்தான் இஸ்லாமிய காலண்டர் உருவாக்கப்பட்டது. ஆனால் அதன் துவக்கத்தில் ஏற்படாத புத்துணர்வும், எழுச்சியும் ஜனவரி முதல் திகதி இஸ்லாமிய உள்ளங்களுக்கு ஏற்படுகின்றது என்றால் இந்த அறியாமையை எங்கு போய் சொல்வது?.

அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

أَفَحُكْمَ الْجَاهِلِيَّةِ يَبْغُونَ وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

“அஞ்ஞான காலத்துத் தீர்ப்பையா அவர்கள் விரும்புகிறார்கள்? உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வை விட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?” (அல்மாயிதா 5: 50).
அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தராத அனைத்தும் அறியாமை (ஜாஹிலிய்யத்) என்பதை இந்த வசனம் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

அல்லாஹ்வின் தூதர் நமக்குக் காட்டிய வழி எது?

“அறியாமை கால மக்களிடம் வருடத்தில் இரு நாட்கள் கொண்டாடி மகிழ்வதற்காக இருந்தன. அல்லாஹ்வின் தூதர் மதினாவுக் ஹிஜ்ரத் செய்து வந்தபோது, நீங்கள் வருடத்தில் விளையாடி மகிழும் இந்த இரு நாட்களை விட சிறந்த இரு நாட்களை அதற்குப் பகரமாக அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கின்றான். அவைகள்: நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள், நூல்: நஸாஈ).

ஹாபிஃழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இந்த நபி மொழியை விளக்கும்போது: ‘நிராகரிப்பாளர்களின் பெருநாட்களை கொண்டாடுவதும், அவர்களுக்கு ஒப்பாகுவதும் வெறுப்பான ஒரு விடயம் எனக் குறிப்பிடுகின்றார்கள்’.

அல்லாஹ்வின் தூதர் தனது உம்மத்துக்கு கொண்டாடி மகிழ்வதற்கு வழிகாட்டிய இரு பெருநாட்களும் எவை? என்பதை மிகத் தெளிவாக இந்த ஹதீஸ் கூறிக்கொண்டிருக்கின்றது. இதை விட்டு விட்டு வேறு வழிகளைத் தேடுவது அறியாமையிலும், வழிகேட்டிலும் தவிர வேறு எதில்தான் கொண்டு போய் சேர்க்கும் என்பதை இவர்கள் சற்று சிந்திக்க வேண்டாமா?

ஹிஜ்ரி ஆண்டின் துவக்கத்தை, முஹர்ரம் முதல் நாளை கொண்டாடுவதை கூடாது பித்அத் வழிகேடு என்று சொல்கின்றோம். அல்லாஹ்வின் தூதரிடம் அதற்கு எந்த முன்மாதிரியும் இல்லை என்கின்றோம். ஆனால் கிறிஸ்தவர்கள், ஏனைய சமூகங்கள் கொண்டாடும் ஜனவரி முதல் திகதியை கொண்டாடுகின்றோம். இது எவ்வளவு பெரிய முரண்பாடு, வழிகேடு என்பதை ஏன் நாம் சிந்திக்க மறுக்கின்றோம்?.

புது வருடம் பிறந்து விட்டது என்று அன்றைய இரவில் எத்தனை எத்தனை அனாச்சாரங்கள், விபச்சாரம், மதுபானம், இசை, ஆடல் பாடல்கள் இவைகள் ஒரு புறம், பட்டாசு வெடிகள் என்று பல கோடிக் கணக்கான ரூபாய்கள் வாரி இறைக்கப்படுவது மறு புறம். இவைகளுக்காக முஸ்லிம் நாடுகள் வாரி இறைக்கும் பணம் பல மில்லியன்கள் என்பது இன்னும் வேதனையான விடயம். உலகின் பல பாகங்களிலும் கோடிக்கணக்கான மக்கள் உண்ண உணவின்றி, தங்க இடமின்றி வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றனர், எந்தப் பயனும் இன்றி வீண் விரயம் செய்யப்படும் இந்த கோடிகளை அவைகளுக்கு பயன்படுத்தப்படுமென்றால் அந்த மக்கள் எவ்வளவு நிம்மதி அடைவர்.

இன்னும் பல மூட நம்பிக்கைகள் இந்நாளில் பரவி இருப்பதையம் பார்க்க முடியும்: கடன் வாங்குவதோ, கொடுப்பதோ கிடையாது, ஏனேனில் அன்றைய நாளில் கடன் வாங்கினாலோ, கொடுத்தாலோ அது தொடர்ந்து கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்குக் காரணம். இது தெளிவான மூட நம்பிக்கை இல்லையா? இது ஒரு உதாரணம் மாத்திரம் தான். இது போன்று எண்ணற்ற மூட நம்பிக்கைகள் அந்நாளில் பரவிக்கிடக்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் தனது வாழ்நாளில் எச்சரித்த ஒரு விடயத்தை இவர்கள் உண்மைப் படுத்தும் வேதனையான ஒரு நிலையைத் தான் இங்கு பார்க்க முடிகின்றது:

“நீங்கள் உங்களுக்கு முன் சென்றவர்களின் வழி முறைகளை சானுக்கு சான், முழத்துக்கு முழம் பின்பற்றுவீர்கள் அவர்கள் ஓர் உடும்பு பொந்துக்குல் புகுந்து விட்டால் அவர்களைத் தொடர்ந்து நீங்களும் புகுந்து விடுவீர்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா குறிப்பீடுகின்றீர்கள்? என்று நாங்கள் கேட்டபோது, வேறு யாரை? என்று அல்லாஹ்வின் தூதர் திருப்பிக் கேட்டார்கள்”. அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) அவர்கள், புஹாரி).

பலர் இந் நாளில் உதயத்துடன் புது வருடம் பிறந்து விட்டது (Happy New Year) என்று வாழ்த்துக்கள் தெரிவிப்பதையும், ஏனையவர்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலம், குறுஞ் செய்திகள் மூலம் ஈமெயில்கள் மூலம் வாழ்த்து தெரிவிப்பதையும் பரவலாக பார்க்க முடிகின்றது. ஆனால் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் இந்த அறியாமைகளில், வழிகேடுகளில் வீழ்ந்துவிடாமல் எச்சரிக்கையாகவே இருப்பான். இன்னும் ஒரு உண்மையான முஸ்லிம் எப்போதும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்பட மாட்டான்.
“எவன் ஒரு கூட்டத்திற்கு ஒப்பாகச் செயல்படுகின்றானோ அவனும் அந்தக்கூட்டத்தைச் சேர்ந்தவனே” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபூதாவுத்).

இது எவ்வளவு கடும் எச்சரிக்கை, இதில் எவ்வாறு ஒரு முஸ்லிம் அலடச்சியமாக இருக்க முடியும்?

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் புவானா எனும் இடத்தில் ஓர் ஒட்டகத்தை அறுத்துப் பலியிட நேர்ச்சை செய்திருந்தார். அதை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அனுமதி கேட்டபோது நபியவர்கள் அவ்விடத்தில் அறியாமைக் காலத்தில் ஏதும் சிலைகள் வணங்கப்பட்டனவா? அதற்கு இல்லை என்று சொன்னார்கள், அறியாமை கால பெருநாட்கள் ஏதும் அவ்விடத்தில் கொண்டாடப்பட்டனவா? என்று கேட்டார்கள் அதற்கும் இல்லை என்று சொன்னார்கள். அப்படியென்றால் உனது நேர்ச்சையை நிறைவேற்றும்” என்று கூறினார்கள். (அபூதாவுத்).

அல்லாஹ்வுக்காக நிறைவேற்றும் ஒரு நேர்ச்சை, அது நிறைவேற்றப்படும் இடத்தில் கூட பிற மதத்தவர்களுக்கு ஒப்பாகி விடக்கூடாது என்பதில் எந்தளவு அல்லாஹ்வின் தூதர் கண்டிப்பாக இருந்தார்கள் என்று பாருங்கள்.
அல்லாஹ்வுக்காக நாம் நிறைவேற்றும் பல வணக்கங்களில், நடை முறை வாழ்க்கை தொடர்பான விடயங்களில் யூதர்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுமாறு அல்லாஹ்வின் தூதர் நமக்கு பணித்திருக்கின்றார்கள். சூரியன் உதிக்கும், மறையும் நேரங்களில் சுன்னத்தான தொழுகைகள தொழுவதற்கு அல்லாஹ்வின் தூதர் தடை விதித்தார்கள். காரணம் அந்நேரத்தில் இறை நிராகரிப்பாளர்கள் தங்கள் கடவுள்களை வணங்கும் நேரம் என்பதற்காக (இந்த செய்தி முஸ்லிமில் பதிவாகியுள்ளது).

இவைகளை நாம் எடுத்துச் சொல்லும்போது சிலர் இது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது இது இஸ்லாத்தைப் பற்றித் தவறான ஒரு தோற்றத்தையே பிற மதத்தவரிடம் ஏற்படுத்தும் என்று கூற ஆரம்பித்து விடுகின்றனர். இது இவர்களின் வெறும் ஒரு வீணாண கற்பனையைத் தவிர வேறு இல்லை. அல்லாஹ் தனது தூதரைப் பற்றி கூறும்போது
” மேலும், (நபியே!) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்”. (68:4).
என்று போற்றுகிறான் அவரை விட அழகிய முறையில் இந்த உலகிற்கு நற்பண்புகளை போதித்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. அவர்கள் பிற மதத்தவர்களுடன் நடந்து கொள்ளும்போது எந்த உயரிய வழி முறைகளைக் கடைபிடித்தார்களோ அது தான் நமக்கு மிகச்சிறந்த முன் மாதிரி. அதல்லாத வேறு ஒரு முன்மாதிரி நமக்குக் கிடையாது.

கிறிஸ்மஸை, ஜனவரி முதல் திகதியை, ஏனைய மதத்தவர்களின் பண்டிகைகளைக் கொண்டாடியதன் மூலம், அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தன் மூலம்தான் அல்லாஹ்வின் தூதர் மத நல்லிணக்கத்தை கடைபிடித்தார்கள் என்று இவர்கள் சொல்ல வருகின்றார்களா? அதற்கு துளியும் அன்னாரது வாழ்வில் ஆதாரம் இல்லை. மாறாக எந்த வகையிலும் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக செயல்படக்கூடாது என்பதில்தான் அவர்கள் மிக உறுதியாக இருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் கடைபிடித்த அந்த உயரிய வரையறைகள் மிகத் தெளிவாக சுன்னாவில் பதிவாகியுள்ளன. (அதை வேண்டுமானால் அல்லாஹ்வின் தூதர் பிற மதத்தவர்களுடன் எவ்வளவு பண்பாக நடந்துகொண்டார்கள் என்பதை தனிக் கட்டுரையாக விளக்கலாம்). ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் வரம்புகளை முரண்படாமல் நீங்கள் மிகத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மிடம் ஒரு ஹிந்து நண்பரோ, பௌத்த நண்பரோ விருந்துக்கு வருகின்றார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவரது உணவு சைவம்தான் என்பதை அறிந்து அதற்கேற்ப உணவைத் தயாரித்து அதைப் பரிமாறுகின்றோம். இது போன்று நமது நிலைகளையும், கொள்கை கோட்பாடுகளையும் அவர்களுக்கு கூறியிருப்போமென்றால் அவர்கள் நிச்சயமாக நம்முடன் அதற்கேற்பத்தான் நடந்துகொள்வார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் சில விடயங்களில் அவ்வாறு தான் நம்முடன் நடந்துகொள்கின்றார்கள் என்பதும் இதற்கு மிகப் பெரிய ஆதாரம். ஆனால் நாம் விட்ட தவறென்ன? நமது கொள்கை கோட்பாடுகளை சரியாக அவர்களுக்கு புரிய வைக்காததே. இதை உணராமல் நம்மில் சிலர் இஸ்லாத்தின் மீது குறை காண்பது அறிவீனமாகும்.

இறுதியாக அல்குர்ஆனின் ஒரு வசனத்தை உங்களுக்கு நினைவு கூறி நிறைவு செய்கின்றேன்:

وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ إِنْ كَانُوا مُؤْمِنِينَ

“அவர்கள் (உண்மையாகவே) முஃமின்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்த மிகவும் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான்.” (9: 62).
தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Thanks to: http://www.islamkalvi.com/portal/?p=50840#more-50840

Friday, December 27, 2013

அதிரையில் ADT நடத்திய மார்க்க விளக்க பொதுக்கூட்டம் !

அதிரை தாருத் தவ்ஹீத் [ ADT ] சார்பாக இன்று 27-12-2013 மாலை 6 மணியளவில் நமதூர் தக்வா பள்ளி அருகில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் தலைவர் அதிரை அஹமது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு பேச்சாளர்களாக கலந்துகொண்ட மவ்லவீ முர்ஷீத் அப்பாஸி அவர்கள் 'ஏகத்துவம்' என்ற தலைப்பிலும், மவ்லவீ சித்தீக் இஸ்லாமி அவர்கள்  'இளைஞர்களே உங்களைத்தான் !' என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

முன்னதாக அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ஜமீல் M. ஸாலிஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெரும்திரளாக கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

நிகழ்ச்சிகுரிய அனைத்து ஏற்பாடுகளையும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பினர் செய்துருந்தனர்.





 
http://theadirainews.blogspot.ae/2013/12/adt.html
 

Wednesday, December 18, 2013

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் பாகம் 1 & 2 (மீள்பதிவு)

 அதிரையில் சமூக ஆர்வலர்கள் தண்ணீருக்காக கரங்கோர்த்துள்ள இன்றைய நல்ல சூழ்நிலையில் நாம் சென்ற வருடம் இரு பாகமாக எழுதிய தொடரை மீள்பதிவு செய்வது அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என கருதுகிறோம். 

 

(மீள்பதிவு)

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 1

கடந்த வருட விடுமுறையில் யோசித்து, இந்த வருட விடுமுறையில் மூன்று நாட்களை செலவழித்து, அலைந்து, திரிந்து, சேற்றில் வழுக்கி விழுந்து, சில இடங்களில் ஆனந்தக் குளியலிட்டும் உங்களுக்காகவே சுட்ட நம்ம ஊரு ஏரி, குளங்களை புகைப்பட ஆவணமாக தருவதில் மெய்யாலுமே சந்தோஷங்க.
சினிமா நகைச்சுவை காட்சியொன்றில் 'கிணத்த காணல' என்று காவல்துறையில் புகார் அளிப்பார் ஒருவர், அது கற்பனை
ஆனால்
அதிரையில் 'ஏகப்பட்ட குளங்களை காணல' என்பது உண்மையிலும் உண்மைங்க ஆனா புகார் தான் யாரும் பண்ணலீங்க.
நானறிந்து காணாமல் போன குளங்களும் அதன் இன்றைய நிலையும்

பங்களா குளம்    -     மேலத்தெரு (புகாரி கடை அருகில்)
 இத்தி குளம்        -    மேலத்தெரு
நாரக்குளம்        -    மேலத்தெரு (வாவாங்கனி லைன்)
 பள்ளிவாசல் குளம்    -    நெசவுத்தெரு
பள்ளக்குளம்        -    எம்.எஸ்.எம் நகர் பின்புறம்
  பறையங்குண்டு    -    மேலத்தெரு (அப்டுடேட் பாதி குளம் சுவாகா)
 எம்.எச்.குட்டை    -    மேலத்தெரு 
(தனியாருக்கு சொந்தமானது – எம்.எச் கொல்லை)

கர்நாடக அரசியலுக்கும், காவிரி தண்ணீருக்கும், காவிரியின் கடைமடையான அதிரையின் ஏரி, குளங்களுக்கும் நேரடி தொடர்பிருக்குங்க. அந்தக்கால அரசியல்வாதி காமராஜ் அவர்களுக்கு 1955 ஆம் ஆண்டு இருந்த நீர்வள அக்கரையில் 1 சதவீதம் கூட இந்தக்கால (மறைந்த)குல்லா, தாத்தா, ஐயா, அம்மாக்களுக்கு கிஞ்சிற்றும் இல்லை என்பதை கீழே வரும் படத்தை பார்த்தாலே தெரிஞ்சுக்குவீங்க.

 நம்ம ஊரு CMP வாய்க்காலுக்கு தண்ணிர் திறந்து விட பயன்பட்ட ஷட்டர்
நமதூரை சுற்றியுள்ள ஏரிகளை ஆழப்படுத்தி நீர்வளத்தை சேமிப்பதன் மூலம் விவசாயமும் தழைத்தோங்கும், நிலத்தடி நீரும் பெருகும், முக்கியமா 'நிலத் திருடர்களின்' ஆக்கிரமிப்பிலிருந்தும் ஏரி, குளங்கள் கொஞ்ச காலமாவது தப்பிக்குமுங்க.

முடிந்தவரை ஏரி குளங்களை அதன் ஒரிஜினல் பெயரிலேயே குறிப்பிட்டுள்ளேன், சிலவற்றை அதன் தெரு மற்றும் இடங்களின் பெயரால் அடையாளப்படுத்தியுள்ளேன். விபரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொன்னால் திருத்திக்குவேனுங்க.

அதிரையின் குளியல் குளங்கள் எல்லாம் காலவதியாகி கீழே வரும் வெறும் 3 குளங்கள் மட்டுமே குளியலுக்காக பயன்பாட்டில் இருப்பது அதிர்ச்சிகரமான செய்திங்க.

 செடியன்குளம்
வெட்டிகுளம் - கடற்கரை தெரு
புள்ள குளம் (ரெட்டகுளம்) – சுரைக்கா கொல்லை

CMP வாய்க்கால்ல தண்ணீர் வரலைன்னு குளியல் போட்ட குளங்களை காயப்போட்ட நாம மாற்று ஏற்பாடுகளாய் நமதூரை சுற்றியுள்ள ராஜாமடம் காட்டாறு, ராஜாமடம் ஏரி, மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி, மாளியக்காடு செல்லிக்குறிச்சி ஏரி போன்ற ஏரிகளிலிருந்து மாற்றுவழிகள் எளிதாக இருந்தும் தண்ணீர் நிரப்ப முயற்சிக்காமல் அலட்சியம் செய்துள்ளோமுங்க. 

 எல்லா பாதைகளும் ரோமாபுரியை நோக்கி என்ற அடைமொழிக்கேற்ப நம்ம ஊரு ஏரி தண்ணிகள் எல்லாம் கடலை நோக்கி வீணாய் சென்று கலப்பதை குறித்து கவலைப்பட ஆளில்லைங்க.


ஆட்டை போடப்பட்ட குளங்கள் போக மீதமுள்ள அதிரை நீர்நிலைகளின் காட்சியும் சாட்சியும்

செடியன்குளம் - இது அதிரையின் அடையாளங்களில் ஒன்று

காட்டுக்குளம் - சி.எம்.பி லைன் பின்புறம் மிலாரிகாடு போகும் வழி, இதன் மரத்தடியில் சுண்ணாம்பு கலவாய் ஒன்றும் இயங்கி வந்தது.


கரிச்சமணி குளம் - ஏரியாக இருந்து குளமாக சுருங்கி இன்று சாக்கடை குட்டையாக ஷிஃபா மருத்துவமனை முன் தேங்கி நிற்கிறது.


வெள்ளக்குளம் - பட்டுக்கோட்டை ரோட்டில், இமாம் ஷாஃபி பள்ளி அருகில் உள்ளது.



ஆலடிக்குளம் - வண்டிப்பேட்டை முக்கம், பெண்களுக்கென சிறப்பான, மறைவான படித்துறையை கொண்டிருந்த சரித்திர மிச்சம்.

மண்ணப்பங்குளம் - அதிரையின் ஒரே (முன்னாள்) குடிநீர் குளம், பெட்ரோல் பங்க் பின்புறம், வண்டிப்பேட்டை.



புள்ளகுளம் - இது இரண்டு குளங்களின் இணைப்பு, ரெட்டை குளம் எனவும் அழைக்கப்படுகிறது, ஒரு குளத்தில் ஆண்களும் மற்றொரு குளத்தில் பெண்களும் குளித்து வருகின்றனர், சுரைக்கா கொல்லை.


ஆணைவிழுந்தான் குளம் - சேர்மன்வாடி அருகில், அரசு மருத்துவமனை முன்புறம், மூச்சுப்பயிற்சி எடுக்க சிறந்த இடம் (தாங்கமுடியாத நாத்தம்).


ஆஸ்பத்திரிதெரு குளம் - புதுப்பள்ளி பின்புறமுள்ளது, ஒரு காலத்துல இங்கயும் தான் குளிச்சாங்க.

பஸ் ஸ்டாண்ட் குளம் - போலீஸ் ஸ்டேசன் எதிரில், பேரூராட்சி அலுவலகம் அருகில், தலைவர், துணை தலைவர், அனைத்து கவுன்சிலர்களும் தினமும் போற பாதையில ஊர் மாணத்த ஏலம் போடுற இடம்.


மாரியம்மன் கோயில் குளம் - கரையூர் தெரு கோயில் அருகில்.

கினியாங்குளம் - தரகர் தெரு, முறையான கரையோ, துறையோ, வழியோ இல்லாத வித்தியாசமான, சுத்தமான குளம், குளத்தை சுற்றியுள்ள வீடுகளின் கொல்லைபுறங்களே இக்குளத்துக்கு செல்லும் வழி என்பதால் வீடுகள் நடுவே அமைந்துள்ள ஓர் தண்ணீர் தீவு எனவும் சொல்லலாம்.



சேனாங்குளம் - கினியாங்குளத்தோடு ஒட்டி உறவாடும் அசுத்தநீர் தேக்கம், கடற்கரை தெரு தர்கா பின்புறமுள்ளது.



வெட்டிக்குளம் - இன்னும் பயன்பாட்டில் உள்ள கடற்கரை தெரு குளம்.


சமரங்குளம் - புதுத்தெரு, மிஸ்கீன் பள்ளி முன்புறமுள்ளது, கொஞ்சம் கொஞ்சமா மூடிக்கிட்டே வர்றாங்க (வலிக்காம அடிக்கிறாங்களாம்).

செய்னாங்குளம் - கீழத்தெரு, காலேஜ் பின்புறமுள்ளது, செடியனின் வடிகால் குளம்.

புதுக்குளம் - மேலத்தெரு, பேர்ல மட்டும் தாங்க புதுசு, மாடு கழுவ கூட லாயக்கில்லீங்க.

சங்கத்து குளம் - நெசவு தெரு, இதுவும் ஒர் (முன்னாள்) ரெட்டை குளங்க, பள்ளியாகுளம் என்ற பேரும் உள்ளது. இதில் இன்னொரு பகுதி குளத்தில ஆளுக்கு கொஞ்சமா வீடு கட்டிக்கிட்டாங்க. இது குளமாயிருந்த காலத்துல கரையோர பூவரச மரத்துல ஒரு வேடந்தாங்களே வந்து குடியிருக்குமுங்க, மாலை நேரத்துல அடையும் பறவைகளின் ரீங்காரம் இன்னும் காதுலயும், மனசுலயும் அப்படியே நிக்குதுங்க.

செக்கடிகுளம் - நடுத்தெரு, ஊர் மத்தியின் கம்பீரம்.


மரைக்காகுளம் - பெண்களுக்கு மட்டுமே இருந்த பிரத்தியேக குளம். மேலத்தெருவுக்கு இது மொடக்குண்டு, புதுமனைதெருவுக்கு இது மரைக்காகுளம், வருங்காலத்துல எல்லோருக்கும் இது வீட்டுமனை.


பெத்தாங்குளம் - மேலத்தெருவிலிருந்து மகிழங்கோட்டை செல்லும் வழியில், ஆளில்லா ரயில்வே கிராஸிங் கீழே.


அதிரையை பற்றி யாராவது ஆன்லைன் மியூசியம் திறப்பதாக இருந்ததால் தாராளமாக இந்த புகைப்படங்களை பயன்படுத்தி கொள்ளலாமுங்க.

 

அதிரையில் மறைந்து வரும் நீர் ஆதாரங்கள் - பாகம் - 2

சென்ற தொடரில் தண்ணீருக்காக நாம் கண்ணீர் வடிக்க வேண்டிய சூழலின் நமதூர் குளங்களின் இன்றைய நிலைகளை கண்டோம்.
இத்தொடரில் ராஜாமடம் காட்டாறு மற்றும் நமதூரை சுற்றியுள்ள ஏரி மற்றும் வாய்க்கால்களின் நிலைகளை சற்று அலசலாம்.
ராஜாமடம் காட்டாறு


நிலத்தடி நீருக்கு அடுத்து, பட்டுக்கோட்டை ஓடை என்றழைக்கப்பட்டு, கிராமங்கள் ஊடாக தொக்காலிகாடு கிராமத்திற்குள் ராஜாமடம் காட்டாறு என்ற பெயரில் நுழையும் மஹாராஜா சமுத்திரம் ஆறு தான் அதிரையின் பிரதான நீர் ஆதாரம்.
மஹாராஜா சமுத்திரம் அணை


தொக்காலிக்காடு மஹாராஜாசமுத்திரம் அணைக்கட்டில் நீர் தடுக்கப்பட்டு ஒர் கிளை வாய்க்கால் மூலம் விவசாயம் மற்றும் வழியில் உள்ள குளங்களை நிரப்ப காலங்காலமாக திருப்பப்பட்டு வந்தது. (பாகம் 1ல் இதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன).
 
கிளை வாய்க்கால்

ராஜாமடம் பாலம்

சறுக்கை




கர்நாடகத்தின் தமிழகத்திற்கான காவிரி நீர் கைவிரிப்பில் துவங்கிய CMP வாய்க்கால் பயன்பாட்டை நமதூர் புண்ணியவான்கள் சிலர் சந்தர்ப்பத்தை கச்சிதமாக பயன்படுத்தி குளத்திற்கு நீர் செல்லும் சிறு, குறு கிளை வாய்க்கால்களை பொறுப்பாக மூடி விட்டனர்.
இச்செயலால் செடியன், மரைக்கா, செக்கடி, ஆலடி, மண்ணப்பன் என மக்கள் பயன்பாட்டில் இருந்தவை இன்று காட்சிப் பொருளாகும் நிலைக்கு சென்றுவிட்டது. ஆதாங்க நம்ம விரலை எடுத்தே நம்ம கண்ண குத்திக்கிட்டோம்னு சொன்னா புரியும்னு நினைக்கிறேன்.
சின்ன ஏரி

பெரிய ஏரி

ராஜாமடம் காட்டாறாக மாறி மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டை நிறைத்து விட்டு வழிந்தோடி வரும் வழியில் இன்னொரு கிளை வாய்க்கால் மூலம் ராஜாமடம் ஏரியையும் நிறைக்குதுங்க. இந்த தண்ணீர் தான் விவசாயம் போக, நம்மூர் காலேஜ் வடிகால் வாய்க்கால் வழியா அப்பப்ப பிலால் நகரை ஒரு கை பார்த்துட்டு கடல்ல போய் வீணா சங்கமம் ஆகுதுங்க.
இந்த வாய்க்காலை ஒரு பொறுப்பான திட்டமிடல்களுடன் ஊருக்குள் மீண்டும் கொண்டு செல்லலாம், அதாவது ரயில்வே லைன் வழியாக அந்த தண்ணீரை மகிழங்கோட்டையில் அதே பழைய CMP வாய்க்காலில் இணைக்க முடியும்.
ராஜாமடம் ஏரி காலேஜ் வடிகால் வாய்க்கால்



இந்த மஹாராஜா சமுத்திரம் அணைக்கட்டு, ராஜாமடம் காட்டாறு, ஆடதொட செடிகளால் சூழப்பட்டும், தோப்புக்காரர்களால் ஓரங்களில் அரிக்கப்பட்டும் வரும் ராஜாமடம் பெரிய ஏரி, சின்ன ஏரி, வழிமறைக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ள சறுக்கை, வடிகால் வாய்க்கால் என சீசன் குளியலுக்கு இன்னும் பயன்படுவது ஆறுதலான செய்திங்க.
செல்லிக்குறிச்சி ஏரி


இதுல தண்ணி வழிந்தால் நேரா கரிச்சமணிக்கு வரும்
அடுத்து, சுமார் 5, 6 கிலோ மீட்டர் பரப்பளவில் பள்ளிகொண்டான் முதல் மாளியக்காடு வரை விரிந்துள்ள செல்லிக்குறிச்சி ஏரி நீர் அதிரையின் கரிச்சமணி குளம் வரைக்கும் வருதுங்க.

கரிச்சமணியை ஆழப்படுத்தி தண்ணீரை தேக்கினா, 100 மீட்டர் தூரத்துல ஆலடி குளத்தையும் நிரப்பலாம். உபரி நீரை 50 மீட்டர் தூரத்துல உள்ள CMP வாய்க்காலிலும் விடலாம். செல்லிக்குறிச்சி ஏரியும் பிளாட் ஆகுமுன்பாக ஆழப்படுத்தப்பட வேண்டும் இதனால் வருட முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதுடன் விவசாயமும் நிலத்தடி நீரும் கணிசமா உயருமுங்க.


மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரி

செல்லிக்குறிச்சி ஏரி நீர் மூலமும் மழைநீர் மூலமும் நிரப்பப்படும் மழவேனிற்காடு கொழுக்கட்டை ஏரியும் நம்ம ஊரு ஏரி தாங்க, பேருதாங்க மழவேனிற்காடு ஆனா இருப்பது வண்டிப்பேட்டை பக்கத்துலங்க.

ஒரு காலத்தில் கடல் ஜாவியா வரை இருந்தது என்பது ஒரு சிலரின் நம்பிக்கை, இக்கூற்று உண்மை என்றால் அதிரையில் மறைந்து வரும் (மறைந்து விட்ட) நீர் ஆதாரங்களில் சேர்க்கத் தகுதியானதே என்றாலும் ஜாவியா வரை கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் கழிமுகம் (வாய்க்கால்) முன்பு இருந்திருக்கக்கூடும் இதையே கடல் ஜாவியா வரை இருந்ததாக சிலர் நம்ப காரணமாக இருக்கலாம்.






செம்படவர் தெரு கழிமுக வாய்க்கால்
(இந்த வாய்க்காலின் தொடர் தான் அந்த காலத்துல ஜாவியா வரை நீண்டும், சற்று அகலமாகவும், ஆழமாகவும் இருந்திருக்கக்கூடும்)

 
குறிப்பு :

ஜாவியாவிற்கு பின்புறம் செய்னாங்குளம் செல்லும் இறக்கத்தில் (தோணி) வத்தை கட்டும் தொழில் பல்லாண்டுகள் இயங்கி வந்தது என் கருத்திற்கு வலு சேர்க்கும் என நம்புகிறேன், கடலுக்குச் செல்லும் கழிமுக வாய்க்கால் அருகே இருந்ததனால் தான் இத்தொழிற்கூடம் இங்கே இயங்கி இருக்கலாம்.

இப்பவும் இருக்கிற காலேஜ் வாய்க்காலுக்கும் ஜாவியாவுக்கு எவ்வளவு தூரம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். காலப்போக்கில் வாய்க்காலும் போச்சு! வத்தை கட்டும் தொழிலும் போச்சு!!

நீர்நிலை குறித்த ஆக்கம் என்பதால் நமதூர் கடல் காட்சிகள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

நமதூரை சுற்றியுள்ள ஏரிகளால் பயன்கள் ஏராளம் ஆனா பயன்படுத்தத் தெரியாத ஏமாளிங்க நாமங்கிறது தான் ஒட்டு மொத்த உண்மைங்க என ஈனஸ்வரத்தில் முனகி என் ஆதங்கத்தை முடிக்கிறேங்க.

தொகுப்பு : அதிரைஅமீன்
படங்கள் : ஆசிக் அகமது
இவர்களுடன் நாளைய செய்தியாளர் அஸ்அத்