உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, January 20, 2012

திருச்சி கட்... திருவனந்தபுரம் ஓகே, திசை மாறும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு இயங்கி வந்த பல விமான சேவைகளை ஏர் இந்திய நிறுவனம் திடுமென நிறுத்திவிடவே, டெல்டா மாவட்ட பயணிகள் ஏக கடுப்பில் இருக்கிறார்கள்.

திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேரடியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், மலேசியா, மற்றும் இலங்கைக்கு விமான சேவைகள் நடைபெற்று வந்தன இந்த ஊர்களுக்கு நியாயமான கட்டணத்தில் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா தினந்தோறும் இயக்கி வந்த பல அயல்நாட்டு விமான சேவைகள் அவ்வப்போது நிறுத்தப்பட்டு வருவதுதான் பயணிகளைக் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பின் திருச்சி மண்டலத் தலைவரான சுப்புவிடம் பேசினோம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்கு திருச்சியில் மட்டும் ஆண்டிற்கு 110 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்து வந்தது. திருச்சி வழியாக இந்த நிறுவனம் இயக்கிய அனைத்து விமானங்களிலும் இருக்கைகள் நிரம்பி,லாபகரமாகவே செயல்பட்டன, அப்படி இருந்தும் லாபக்ரமான வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருந்த சில விமானங்களை முழுவதுமாக ரத்து செய்தும், சில வழித்தடங்களில் விமான சேவையைக் குறைத்தும் வருகின்றனர்.

திருச்சி, கோலாலம்பூர் தினசரி விமான சேவையும், திருச்சி - கொழும்பு தினசரி விமான சேவையும் முழுவதும் ரத்து செய்யப்பட்டுவிட்டது. திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு வாரம் 14 முறை இயங்கி வந்த விமான சர்வீஸில், ஐந்து சர்வீஸ் குறைக்கப்பட்டுள்ளது, திருச்சி - அபுதாபி விமான சேவை வாரம் ஒரு டிரிப் குறைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து சென்னைக்கு நடைபெற்று வந்த தினசரி விமான சேவை வாரம் ஐந்து டிரிப்பாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ரூட்களில் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்தால்தான் சீட் கிடைக்கும் என்ற நிலை இருக்கும்போது, இந்த சேவைகளை ரத்து செய்ததன் மர்மம் புரியவில்லை.

நியாயமான கட்டணத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பல தனியார் விமான நிறுவனங்கள் மிக அதிகக் கட்டணத்தை வசூலித்து இந்த வழித்தடங்களில் விமானங்களை இயக்கி கொள்ளை லாபம் பார்க்கின்றனர். திருச்சியில் இருந்து கோலாலம்பூர், சிங்கப்பூர் செல்ல இருவழி பயண கட்டணமாக 12 ஆயிரம் ரூபாயில் பயணம் செய்து வந்தவர்கள், தற்போது தனியார் விமானங்களில் ஒரு வழிப் பயணக் கட்டணமாக மட்டுமே 21 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியுள்ளது. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு அதிக விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல், இருந்த சேவைகளையும் பறித்து விட்டார்கள் என்றார் வேதனையுடன்.

லாபத்தில் இயங்கிய திருச்சி வழியான ரூட்களை கட் செய்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம், புதிதாக திருவனந்தபுரத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமான சேவையை துவக்கி உள்ளது. அந்த விமானத்திற்குப் போதிய பயணிகள் இல்லாமல், நஷ்டத்தில் இயங்கினாலும் நிறுத்தாமல் இயக்குகிறார்கள், மேலும் , பல புதிய அயல்நாட்டு பயண சேவைகளை திருவனந்தபுரத்தில் இருந்து துவக்கவும். திட்டம் வைத்துள்ளது.

தமிழக முதல்வரின் தொகுதி அமைந்துள்ள திருச்சி மாவட்டத்தில், சுற்றுலாவை மேம்படுத்துவற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளார். முதல்வர். அதில் சிங்கப்பூரில் உள்ளதைப் போன்ற சென்டோசா பூங்கா திட்டமும் ஒன்று திருச்சி மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் முதல்வரின் எண்ணத்திற்கு எதிராகவே ஏர் இந்தியா செயல்படுகிறது. தனியார் விமான நிறுவங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்க வசதியாக அவர்களிடம் பெரும் தொகையைப் பெற்றுகொண்டு விமானசேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியிருக்கலாமோ ? என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது' என்று டென்ஷன் ஆகிறார்கள் திருச்சியில் உள்ள விமான பயண ஏற்பாட்டாளர்கள்.

இதுகுறித்து பேசுவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் திருச்சி மண்டல  மேலாளர் ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டோம் நான் பிஸியாக
இருக்கிறேன். சிறிது நேரம் கழித்துப் பேசுங்கள் என்றவர், அதன்பிறகு பலமுறை அவரை தொடர்புகொண்டபோதும், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கேரள அரசை கண்டித்து ஒட்டுமொத்த தமிழகமும் போராடிக்கொண்டு இருக்கிறது இந்த சமயத்தில்,வான் வழி பயண சேவையில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பல விமான சேவைகள் சத்தமில்லாமல் நிறுத்தப்பட்டு, கேரளாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது, பல கேள்விகளை எழுப்புகிறது.

மாநில அரசு உடனடியாக இந்த விவகாரத்தைக் கண்காணிக்க வேண்டும் !

நன்றி : ஆனந்தவிகடன்

தகவல் : அதிரை M. அல்மாஸ்

Thanks to: adiraitiya.blogspot.com

No comments:

Post a Comment