உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, November 10, 2011

சுயபரிசோதனை!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

கண்ணியமிக்க சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!

'ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே ஆகவேண்டும்;. அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை' (அல்குர்ஆன் 3:185)

எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்தகால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து, நம் எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும் தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை.
எல்லாவற்றிற்கும் மேலாக மறுமைக்காணதோர் பயணம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் ஒரு சுவனப் பசுஞ்சோலையை நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம், அல்லது பாதாள படுகுழியின் பாசறையான நரகம் நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மை நாம் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

அன்பு நெஞ்சங்களே! மறுமையின் நந்தவனத்தில் நாமும் ஒரு மலராக வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? இதோ கீழ்காணும் எண்ண அலைகளை அமைதிப்படுத்த முயற்சிப்போமாக! எம்மைப் படைத்த வல்ல ரஹ்மானின் ஆதரவு என்றும் நம்மோடு இருக்கின்றது.


• நான் முஸ்லிமாக இருப்பதை உணர்ந்து அல்லாஹ்வைப் புகழ்ந்தேனா? அல்லது நான் ஒரு நன்றி கெட்டவனா?

• எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேனா? அவனிடமே உதவியும் தேடுகின்றேனா?

• இறையச்சமுடையவனாகுவதற்கு எந்த அளவு முயற்ச்சித்-திருக்கிறேன்? அல்லது என் மனது கல்லாகி விட்டதா?

• எல்லா நேரத் தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுகின்றேனா? எத்தனை முறை முன்வரிசையில் நிற்பதற்கு கவனம் செலுத்தியிருக்கின்றேன்?

• அல்குர்ஆனை நிதானமாக எத்தனை முறை ஓதியிருக்கிறேன்? அதன் மொழி பெயர்ப்பை படித்து விளங்க முயற்சி செய்தேனா? அல்லது இன்னமும் ஓதவே தெரியாதா?

• சுன்னத்தான தொழுகைகளைத் தொழுகின்றேனா? குறிப்பாக முன்பின் சுன்னத்துகள், வித்ர், ளுஹா போன்ற தொழுகைகளோடு எந்தளவு என் தொடர்பு இருக்கின்றது?

• திக்ர்களைப் பேணி ஓதி வருகின்றேனா?

• எல்லா அமல்களையும் இஹ்லாஸோடு செய்கின்றேனா? அல்லது உலக இலாபம் தான் என் நோக்கமா?

• அல்குர்ஆனில் எத்தனை சூராக்களைப் பாடமாக்கியிருக்கிறேன்? எத்தனை
ஹதீஸ்களை மனனமிட்டிருக்கின்றேன்? இல்லை இல்லை பாட்டும் படமும் தான் என் சிந்தனையின் விருந்தா?

• மற்றவர்களுக்கு சலாம் கூறுகின்றேனா? அல்லது சலாம் கூறுவது கூட எனக்கு கசப்பாக இருக்கின்றதா?

• புன்சிரிப்போடும், நல்ல வார்த்தைகளோடும் மற்றவர்களைச் சந்திக்கின்றேனா? அல்லது கர்வம் தான் என் நடைமுறைகளின் அலங்காரமா?

• தீமை தரும் பேச்சுக்களை விட்டும் என் நாவை எந்தளவு பாதுகாத்துக் கொள்கின்றேன்? அல்லது வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் தான் என் கைதேர்ந்த கலையா?

• என்றாவது மையவாடியைத் தரிசித்து, நமக்கும் மரணம் வருமே! என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா? அல்லது இவ்உலக வாழ்க்கை அந்த மரணத்தையும் மறுமையையும் மறக்கடித்து விட்டதா?

• கப்ர் வாழ்க்கைக்கான கட்டுச் சாதனத்தை தயார் செய்து விட்டேனா? அல்லது கப்ர் வாழ்க்கையே இப்போது தான் நினைவுக்கு வருகிறதா?

• பிறர் குறைகளைப் பாராது என் குறைகளை சீர் செய்வதில் எந்த அளவு ஆர்வம் காட்டியிருக்கின்றேன்? அல்லது பிறர் குறை மேய்வது தான் என் தொழிலா?

• காலத்தை வீணடிக்காது அமானிதத்தைப் பாதுகாத்து இருக்கின்றேனா? அல்லது காலம் கூட அமானிதம் என்பது எனக்குத் தெரியாதா?

• என் எல்லாக்காரியங்களிலும் வலதை முற்படுத்துகின்றேனா?

• பாங்கு சொல்லும்போது அதற்கு பதில் சொல்கின்றோனா? அல்லது வீணாக பேசிக் கொண்டிருக்கின்றேனா?

• எந்த அளவு என் நாவை பேணுகின்றேன்? குறிப்பாக புறம் பேசாமலிருக்கின்றேனா?

• தீமையான விஷயங்களைக் விட்டும் என் காதுகளையும், என் கண்களையும் காத்துக்கொள்கின்றேனா?

• பிற முஸலிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எப்போதாவது பிரார்த்தனை செய்துள்ளேனா?

• பெருமையடிக்காமல் அல்லாஹ்வுக்கென்று என்னைத் தாழ்த்திக் கொண்டேனா?

• அல்லாஹ்வின் படைப்பினங்களைக் கூர்ந்து கவனித்து படிப்பினை பெற்றுள்ளேனா?

• சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்விடத்தில் முறையிட்டு கண்ணீர் விட்டு அழுதிருக்கின்றேனா?

• கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றேனா?

• என் பெற்றோர்களோடு நல்ல முறையில் நடக்கின்றேனா? உறவினர்களோடு சேர்ந்து வாழ்கின்றேனா?

• ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்கின்றேனா?

• யாராவது நோய் வாய்பட்டிருக்கும் நிலையில் நோய் விசாரிக்கச் சென்று நோய் நிவாரணத்திற்காக அந்நோயாளிக்கு பிரார்த்தனை செய்தேனா?

• ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் என்னை நானே சுய பரிசோதனை செய்கின்றேனா?
சகோதர சகோதரிகளே! இக்கேள்விகளை அடிக்கடி உங்கள் மனதில் ஓட விடுங்கள்! ஒவ்வொரு கேள்விக்கும் விடை காண முழு முயற்சி எடுங்கள்! நம் அமல்களை ஏற்றுக்கொள்ள வல்ல அல்லாஹ் போதுமானவன்!

(நன்றி: சுவனத்தென்றல் டாட் காம்)
வெளியீடு: தவ்ஹீத் இல்லம் தஃவா குழு

No comments:

Post a Comment