உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Thursday, September 1, 2011

திருச்சி பயணிகளை அலைகழிக்கும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ்


சென்னைக்கு சென்று வரும் தூரத்தையும் நேரத்தையும் நீண்டதூர பயண அசௌகரியங்களையும் கருதி நமது அருகாமை திருச்சி விமான நிலையத்தை நாமெல்லாம் பயன்படுத்தி வருகிறோம். இதனடிப்படையில், நாம் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையையும் தேர்வு செய்கிறோம் ஆனால் ஸ்ரீ  லங்கன் ஏர்லைன்ஸ் திருச்சி பயணிகளை அலைக்கழித்து பல அவதிகளுக்கு உள்ளாக்குகின்றது.

சுமையில் ஒரு சில கிலோ கூடினால் கூட துபையிலிருந்து திருச்சிக்கு ஒவ்வொரு கிலோ கூடுதல் எடைக்கும் திர்ஹம் 65 என கட்டாய வசூல் செய்யும் ஸ்ரீ  லங்கன் ஏர்லைன்ஸ் நம்முடைய அனுமதிக்கப்பட்ட சுமைகளை கூட ஒழுங்காக கொண்டு வந்து சேர்ப்பதில்லை. மிகச் சர்வசாதாரணமாக உங்களுடைய பொருட்கள் நாளை வரும் என அலட்சிய பதிலையே ஊழியர்கள் கூறுகிறார்கள்.

தினமும் இவ்வாறு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் அலட்சியத்தால் மாட்டும் (பாதிக்கப்படும்) 25 முதல் 50 பயணிகள் ஒரு வழியாக புகாரை பதிவுசெய்து விட்டு வெளியேற விமானம் வந்து போன பின் கூடுதலாக 3 முதல் 4 மணி நேர அனாவசிய தாமதமாகிறது, அதுவரை நம்மை வரவேற்க வந்திருக்கும் குடும்பத்தினரும் வெளியே காத்திருக்க வேண்டியுள்ளது.


ஒரே நேரத்தில் துபை, சவூதி, மஸ்கட், பஹ்ரைன், தோஹா, மலேஷியா என வந்திறங்கும் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளின் பேக்கேஜ்கள் சிலருக்கு முழுமையாகவும், சிலருக்கு ஒன்றிரண்டு எனவும் கொழும்பு ஏர்போர்ட்டில் தடுத்து வைக்கப்படுகிறது, மேலும் கொழும்பு விமான நிலையத்தில் விமானம் ஏறும் சமயம் கையிலிருக்கும் பெரிய கேபின் பேக் மற்றும் டூட்டி ஃப்ரி பேக்குகளையும் பிடிங்கி லக்கேஜில் சேர்ப்பதால் பலர் வெறுங்கையுடன் வீடு வரும் நிலையும் தொடர்கதையாக தொடர்கிறது.

நம்முடைய சுமை பொதுவாக மறுதினம் வரவேண்டும் என்றாலும் இடையில் வாராந்திர மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் குறுக்கிட்டால் நம்முடைய சுமைகளை பெற்றுக் கொள்ள இன்னும் காத்திருக்க வேண்டும். மேலும் காலை 9 மணிக்கெல்லாம் வந்து விடுங்கள் என்று தொலைபேசியில் அழைப்பு விடுப்பார்கள் ஆனால் அங்கு போனால் வேறு விமானங்கள் இறங்கியுள்ளன அந்தப் பயணிகள் அனைவரும் வெளியேறிய பின்பே உங்களை உள்ளே அனுமதிக்க முடியுமென விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் சுங்க அதிகாரிகளும் காலை சுமார் 11.30 மணி வரை வெளியே காக்க வைக்கின்றனர்.

ஒரு வழியாக உள்ளே சென்றால் சுங்க அதிகாரிகளின் ஆமைவேக சரிபார்ப்பில் எல்லோரும் வெளியேற பகல் 2 மணிக்கு மேல் ஆகிவிடுகிறது. இதில் இன்னொரு தண்டனையும் உண்டு அதாவது நாம் வரும்போதே நம்முடைய சுமைகள் ஒழுங்காக வந்திருந்தால் எந்தவித சுங்கத்தீர்வையும் செலுத்தாமல் வெளியேறி இருக்கலாம் ஆனால் ஒரு சில நாள் தாமதத்தில் வரும் நம் சுமையில் ஏதாவது எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தால் அதற்கான வரியை கட்டாயமாக வசூலித்து தங்களது பணி நேர்மையை காட்டத் தவறுவதில்லை நம் சுங்க அதிகாரிகள்.

நமது பொருட்களை எடுத்து வருவதற்காக குறுகிய கால விடுமுறையில் / வெறும் 4 அல்லது 5 நாள் ஈதுப் பெருநாள் விடுமுறையில் வந்த பலரும் தங்களுடைய பெறுமதி மிக்க நாள் ஒன்றை திருச்சி விமான நிலையத்தில் தொலைக்க நேரிட்டது.

பெருநாளுக்காக தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்தினர்களுக்கும் புத்தாடைகளை இருந்த சுமைகள் வராமல் பரிதவித்தோர் பலர், கையாளாகாத ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தவறால் மீண்டும் இரவோடு இரவாக புதுத்துணிமணிகளை எடுத்து அடுத்த நாள் பெருநாள் கொண்டாட வேண்டிய நிர்பந்தம்.

நாம் நம்முடைய சுமைகளை பெறுவதற்காக மீண்டும் வாடகை வாகனங்களை அமர்த்திக் கொண்டு வர நேரிடுகிறது இந்த வாகன வாடகையை திருப்பிக்; கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டும் 45 வேலை நாட்களில் ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நமக்கு திருப்பித் தந்துவிடுமாம் அதற்கும் பேங்க் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கனும், அக்கவுண்ட் இல்லாதவர்கள் பாடுதிண்டாட்டம் தான்.

இப்படியாக ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகத்தால் பயணிகள் படும்  அவதிகளை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம் அப்படி ஒரு அலட்சிய நிர்வாகம். ஸ்ரீ  லங்கன் ஏர்லைன்ஸில் இனி பயணிக்க நினைப்பவர்கள் மேற்படி குறைகளை கருத்திற்கொண்டு விமான டிக்கட் எடுப்பது நலம்.

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தன் சேவை குறைகளை சரி செய்ய முன்வராவிட்டால் திருச்சி சேவையை பயணிகள் முற்றிலும் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் என கடுமையாக எச்சரிக்கின்றோம்.

சுய அனுபவங்களுடன்
அதிரை அமீன்

No comments:

Post a Comment