உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Tuesday, December 6, 2011

முதிர் குழந்தைகள்‏

'ஏய் அம்மாவின் புடவ கலர்ல வானம் இருக்குடி' 'ஆமாம்டா அதில் விதவிதமா யாரோ ஓவியம் வரைஞ்சிருக்காங்க பாரு' தன் குழந்தைகள் வானத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததை கண்ட பெற்றோர்களின் மனம் குதூகலித்தது.

அலுவலகத்தின் டென்ஷனுடன் படுக்கையில் சாயும் தந்தையின் நெஞ்சில் ஏறி உட்கார்ந்து 'யாரு உனக்கு கன்னத்துல தாடி ஒட்டி விட்டாங்க' என்று தன் குழந்தை கேட்கும் அந்த தருணங்களில் அலுவலக டென்ஷன் எல்லாம் பறந்துப் போகும் அந்த விந்தை பெற்றவருக்கு புதிராகவே இருக்கும்.

நேற்றிருந்த அந்த சந்தோஷங்கள் அடியோடு எவரோ திருடிக் கொண்டு போய்விட்ட மாதிரி இல்லங்களிலிருந்து துடைக்கப்பட்டு விட்டன. இன்றைக்கு அந்த பிஞ்சுகளின் மன கிளர்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரமூட்டுவதே வன்முறை விளையாட்டுகள் தான் எனும் அளவிற்கு நிலைமை மோசமாகி விட்டது.
அடுப்பங்கரையில் இருக்கும் கரண்டிகளை கையில் எடுத்துக் கொண்டு 'டுமீல்' 'டுமீல்' என்று சத்தமிட்டப்படியே தன் சக நண்பர்களை துரத்திக் கொண்டு செல்வது தான் அவர்களை பொருத்தவரை நாகரீக விளையாட்டு.

'டாடி ஒழுங்கா அத கொடுத்துடு இல்லேனா சுட்டு தள்ளிடுவேன்' கையில் இருக்கும் பொருள் தந்தையை நோக்கி உயரும் போது இதை ரசிக்கும் மன நிலை நிச்சயம் பெற்றோருக்கு இருக்காது.

எங்கு தொலைந்து போனது அந்த பிஞ்சுகளின் இயற்கையான மழலைத் தன்மை..?
'என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன்' என்பது போல் எதிரே தொலைக் காட்சிப் பெட்டி.
 
மூன்று வயது வரை குழந்தைக்கு ஹீரோ அவன் தந்தை தான். யாரும் அவனிடம் வம்பு செய்தால் 'என்கிட்ட வச்சுக்காத.. எங்க டாடிகிட்ட சொல்லிடுவேன்' என்று சொல்லும் அவனுக்கு மூன்று வயது கடந்து விட்டால் பிறகு மனதிலிருந்து பெற்றவரை துரத்தி விட்டு தான் அமர்ந்துக் கொள்ள நிறைய ஹீரோக்கள் வந்து விடுகிறார்கள். அந்த நடிகர்களின் ஆக்ரமிப்பிற்கு பிறகு இவனது நடை உடை பாவனைகள் கூட மாறி தானே அந்த ஹீரோ என்று கற்பனை சினிமா உலகின் உறுப்பினராகிறான்.

பள்ளிக் கூடம் முடிந்து வீடு வந்தது முதல் இரவு தூங்கும் வரை உளவியல் ரீதியாக குழந்தைகளை தாக்கி அவர்களின் பிஞ்சுத் தன்மையை சாகடிக்க வெடிக்காமல் ஆனால் வெடித்துக் கொண்டே இருக்கும் வெடி குண்டாக ஒவ்வொரு வீட்டிலும் மிக தாராளமாக ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறது தொலைக் காட்சி.

ஒளிப்பரப்பாகும் சினிமாக்களும் அதில் வரும் வன்முறைகளும் குழந்தைகளின் உள்ளத்தை வெகுவாக கவ்வி பிடித்து அதை நோக்கியே அவர்களை நகர்த்திச் செல்கின்றன.

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன்
தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன்
சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன்
விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன்
படிப்பது தொலைக் காட்சிக்கு முன்
என்று குழந்தைகளின் மொத்த நேரமும் தொலைக் காட்சி வாழ்க்கையாகவே மாறிக் கொண்டு இருக்கிறது.

தொலைக் காட்சி இயக்குனர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இருப்பதில்லை. வீட்டிலிருக்கும் பெரியவர்களை விட அதிகமாக தொலைக் காட்சியை பார்க்கும் குழந்தைகள் பெரியவர்களை விட அதிகமாகவே பெரியவர்களின் சமாச்சாரங்களையெல்லாம் கற்றுக் கொண்டு விடுகின்றன என்பது ஆய்வுகளில் வெளி வரும் அதிர்ச்சிகரமான தகவல்களாகும்.

டீ.வி சீரியல்களில் குழந்தைகள் வக்கனையாக பேசுவதை இப்போதெல்லாம் சாதாரணமாக காணலாம். மழலைத் தன்மையின் அடையாளமே இல்லாத வசனங்கள் - நடிப்புகள்.

ஆன்மீகம் என்ற பெயரில் ஒளிப்பரப்பாகும் எண்ணிக்கையற்றத் தொடர்களில் கம்ப்யூட்டரால் நடத்தப்படும் 'டெக்னிக்' ஜாலங்கள் குழந்தைகளின் மனங்களில் வேறுவிதமான அதிர்ச்சியையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதன் விளைவை சக்திமான் சீரியல் மூலம் உலகம் கண்டது.
சக்திமான் காப்பாற்றுவார் என்று தூக்குப் போட்டுக் கொண்டு இறந்த சிறுவன். அதே நம்பிக்கையில் தீக்குளித்து இறந்த சிறுவன். சக்தி மானை நம்பி சேற்றில் மூழ்கி இறந்துப் போன சிறுவர்கள் என்று தற்கொலை பட்டியலில் இடம் பிடித்துக் கொண்ட பிஞ்சுகள் அனேகம்.

நம்பிக்கை - விளையாட்டு - பேச்சு - பாவனை - நடவடிக்கை என்று குழந்தைகளின் மொத்த வாழ்வையும் தொலைக் காட்சி கொள்ளையிட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தையில் இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் கெட்ட தாயாக, கெட்ட தந்தையாக, கெட்ட நண்பனாக, கெட்ட டீச்சராக, கெட்ட உலகின் வாசலாகவும் வாழ்க்கையாகவும் தொலைக் காட்சிகள் இருக்கின்றன குழந்தைகளுக்கு.


யார் பொறுப்பு?

திரைப்படங்கள், தொலைக் காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பொருத்தவரை அவை சமூக சிந்தனை - குழந்தைகள் நலன் - அவர்களின் எதிர்கால அக்கறைக் கொண்டவர்களால் நடத்தப்படுவதில்லை. எடுக்கப்படுவதில்லை. அவர்களின் குறிக்கோள் எல்லாம் பணம் ஒன்றுதான். இத்தகைய மனிதத்துவம் அற்ற கெடுதியாளர்களிடமிருந்து நம் குழந்தைகளை காப்பாற்றும் முழு பொறுப்பும் பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளன. இதில் அதிக பொறுப்புக்குரியவர் பெற்றத் தாயே.

'எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே
அவன் நல்லவனாவதும், தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற தமிழ் பாடல் குழந்தை வளர்ப்பில் அன்னையின் பங்கை அழகாக சொல்லியுள்ளது.
குழந்தைகள் பச்சை மண் போன்றவர்கள். அதாவது தாய் என்ற குயவன் கையில் கிடைத்த பச்சை மண். அதை பயன்படும் விதத்தில் உருவாக்கும் கடமைக்குரியவள் தாய் தான்.

நிறையப் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பதென்பதே தெரிவதில்லை. ஒன்று அதீத கட்டுப்பாட்டுக்குள் தள்ளி அவர்களை சிந்தனை ரீதியாக வளர விடாமல் தடுத்து அடிமைப்பட வைத்து விடுகிறார்கள். இதன் விளைவு குழந்தைகளின் எதிர்காலத்தில் சமூக பிரச்சனைக்கு ஈடு கொடுக்க முடியாத பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும். மன அளவில் இயலாமையும், கோழைத்தனமும், பலவீனமும் ஆட் கொண்டு விடும்.

அல்லது கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்து தங்கள் கட்டுப்பாட்டிலிருந்து முழுவதும் குழந்தைகளை விடுவித்து விடுவதையும் பார்க்கிறோம். இந்த சுதந்திரம் பெற்றோர்களையே எதிர்த்து சமயம் கிடைக்கும் போது அவர்களை வீட்டை விட்டே துரத்தும் நிலையைக் கூட ஏற்படுத்தி விடும்.

இரண்டு நிலையும் தவறு.
 
குழந்தைகளை அதி தீவிரமாக கண் காணித்து, அவர்களோடு பழகி, அதட்டி - அரவணைத்து, கண்டித்து - கொஞ்சி, திருத்தி - பாராட்டி பழக வேண்டும். குழந்தைகளிடமிருந்து நாம் ஒதுங்கும் ஒவ்வொரு நிமிடமும் தொலைக் காட்சி அவர்களிடம் நெறுங்குகிறது என்பதை எக்காரணம் கொண்டும் மறந்து விட வேண்டாம்.

உண்ணும் போது - படிக்கும் போது - உடை உடுத்தும் போது - விளையாடும் போது தொலைக் காட்சியை அணைத்து விடுங்கள். அந்த நேரங்களில் என்ன பிடித்தமான தொடர்கள் ஒளிப்பரப்பப்பட்டாலும் குழந்தைகள் மீது அக்கறையுள்ள தாய் அந்த தொடர்களை புறக்கணித்துத் தான் ஆக வேண்டும்.

பிள்ளைகளை விட தொடர்களே முக்கியம் என்று கருதும் எந்த தாயும் வன்முறை, பாலியல் வக்கிரங்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் ஆகியவற்றை நோக்கி தன் குழந்தைகளை தள்ளுகிறாள் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய முதிர் குழந்தைகளின் எதிர்கால வீழ்ச்சிக்கு பெற்ற அன்னையே பொறுப்பேற்க வேண்டும்

நண்றி: நமக்குள் இஸ்லாம்
யாழ் இனிது குழல் இனிது என்பார்
மழலைச் சொல் கேளாதோர் - என்ற மழலை மொழியை மனக்கச் செய்யும் பழமொழிகள் வரும் காலத்தில் அர்த்தமற்றுப் போய்விடும் அபாயம் தென்படுகிறது.

No comments:

Post a Comment