உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Friday, December 28, 2012

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்


அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்..

அல்லாஹ்வின் அடியார்களே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூசுவதற்காகக் கடந்த 23.12.2012 பகல் 2.45 மணியளவில் மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து லெப்பை அலாவுத்தீன் இறந்து விட்டார்!  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).  இந்த இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஒரு வீட்டிலுள்ள குளியலறைக்குள் குளிப்பதற்காகச் சென்ற ஒருவர் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெளிவராவிட்டால், அந்த வீட்டார் என்ன செய்வார்கள்?  அதுவும், குளிக்கச் சென்றவர் இரத்த அழுத்த நோயாளியாகவும் சர்க்கரை நோயாளியாகவும் இருப்பாராயின், எவ்வளவு கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள்? வழக்கமாகப் பதினைந்து நிமிடத்தில் தம் குளியலை முடித்துக்கொண்டு வெளிவரவேண்டியவர், அரைமணி நேரமாகியும் வெளிவராவிட்டால்?
 
ஒரு மணி நேரம் தாண்டிய பின்னரும் உள்ளே சென்றவர் என்னவானார் எனும் கவலையற்று இருந்துவிட்டு, கடைசியில் அவரை உயிரிழந்தவராகத் தூக்கிவந்து போட்டு, அவருக்கு அநியாயம் இழைத்துவிட்டு, எவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல், தம் குற்றங்களை அல்லாஹ்வின்மீது திசை திருப்புவது அறிவற்றவர்களின் செயலாகும்.  அப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான் மர்ஹூம் அலாவுத்தீன் விஷயத்தில் அரங்கேறியது.  வழக்கமாக, ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர், ஏறத்தாழ மூன்று மணி நேரம் (மாலை ஐந்தரை) வரை என்னவானார்? என்று கபுருக் கதவைத் திறந்து அல்லது உடைத்துப் பார்ப்பதற்கு தர்ஹாவில் குழுமியிருந்தவர்களைத் தடுத்து நிறுத்திய அறிவீனம் எது?  அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மௌட்டீகக் கொள்கையான தர்ஹா வழிபாட்டு நம்பிக்கை நிகழ்த்திய அநியாம்தான் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்:

"மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எவ்வித அநியாயமும் செய்வதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்." (அல் குர்ஆன் 10:44).

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கி, படைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக நம்மை ஆக்கியருளியிருக்க, அவனளித்த அருட்கொடையான அறிவை, என்றோ இறந்துவிட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டு, அல்லாஹ்வுடைய மௌத்து’ என்று கூர் மழுங்கிப்போய் கூறுதல் முறையல்ல.
 
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்.  நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!" என்று அல்லாஹ் தன் அருள் மறையில் (4:78) எச்சரிப்பது, மௌத்துக்கு அஞ்சி ஓடி எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்ற பொருளிள்தானே அன்றி, நம்முடைய மடமையினால் ஓர் உயிரை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவல்ல.
 
என்றோ மரணித்து, பதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும், அந்தக் கபுருக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும், அந்தக் கபுருக்குச் சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை இன்னும் ஏற்க மறுப்பது மடமையின் உச்ச கட்டமாகும்.

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை செய்தார்கள்" ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரால் ஆண்டு தோறும் கந்தூரி எடுப்பதும், அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.  அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளக்கும் இதோ சில நபிமொழிகள்:

 وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا 

"... எனது சமாதியை (கந்தூரி) விழா நடக்கும் இடமாக்கிவிடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரித்தார்கள்." அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது 1746 .

 َنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ

"... இறைவா, எனது சமாதியை வழிபடும் இடமாக ஆக்கிவிடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்." அதா இப்னு யஸார் (ரலி) : அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
 
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ 

"சமாதிகளை தரிசிக்கச் செல்லும் பெண்களையும், அவற்றில் வழிபாடு செய்யும் பெண்களையும், (சமாதிகளில்) விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்." இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது 2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

  لَعْنَ اللَّه الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உறுதிபடக் கூறினார்கள். தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றியும் எச்சரித்தார்கள்" - அன்னை ஆயிஷா (ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976, நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
 
கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்பதை நம் ஊர் மக்களுக்குத் தெளிவாக - உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும். குறிப்பாக, மார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும்.  ஏனெனில், மறுமையில் அவர்களுக்கு இது பற்றிக் கூடுதல் கேள்வியுண்டு!  ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கும் அவ்வாறே கூடுதல் கேள்விகள் மறுமையில் காத்திருக்கின்றன!
 
தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றி, உயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர், அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும், அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும், கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின்  பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!
 

வெளியீடு 3/2012 - நாள் : 28.12.2012
 
அறிவுறுத்தும்,
 

அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East) Street, P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email : salaam.adt@gmail.com

1 comment:

  1. அன்பானவர்களுக்கு,
    அஸ்ஸலாமு அலைக்கும்.

    "மடமையிலிருந்து விடுதலை பெறமாட்டோம்" என்ற எண்ணத்தில் இருப்போருக்காக நாம் எதுவும் செய்யவியலாது - அவர்களின் நேர்வழிக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர.

    ஆனால், "மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்" எனும் உறுதிகொண்டவர்களை இனங்காண்பதும் வாழ்த்தி வரவேற்பதும் நமது கடமையாகும்.

    நமதூர் பிலால் நகரில் அமைந்துள்ள 'இஸ்லாமியப் பயிற்சி மைய'த்தில் கடந்த ஒருமாதகாலமாக நடைபெறும் வகுப்புகளில் பயிலும் மாணவ-மாணவியர்களுள் 50 பேர் "இனிமேல் ஹந்தூரிக்குப் போகமாட்டோம்" என்று உறுதியாகப் புறக்கணித்துவிட்டனர், அல்ஹம்து லில்லாஹ்! இவர்கள் அனைவரும் வழக்கமாக இரு ஹந்தூரிகளுக்கும் சென்று வந்தவர்களாவர். இவர்களின் புறக்கணிப்பால் நடந்து முடிந்த கடற்கரைத் தெரு ஹந்தூரி 50 வருகையாளர்களை இழந்துவிட்டது.

    இது அல்லாஹ்வின் பேரருளின் நேர்வழிக்கான முதற்கோடு எனலாம்.

    மேற்சொன்ன மாணவ-மாணவியரைப் பாராட்டி, அவர்களுக்குப் பரிசளிப்பு நிகழ்ச்சி ஒன்று இன்று அஸ்ருத் தொழுகைக்குப் பின்னர் பிலால் நகர் மர்கஸில் நடைபெறவுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - ஜமீல் எம் ஸாலிஹ்
    செயலர், அதிரை தாருத் தவ்ஹீத்

    ReplyDelete