வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்த 6 அமெரிக்க ராணுவ வீரர்களை துறை ரீதியாக தண்டிக்க அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள பக்ரம் விமானப்படை தளத்தின் குப்பைத் தொட்டியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செயலைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டம் நடத்தினர். இது மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா மன்னிப்பு கேட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து பிரிகேடியர் ஜெனரல் பிரையன் ஜி. வாட்சன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது,
ஆப்கானிஸ்தானில் சுமார் 100 குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை அமெரிக்க ராணுவ வீரர்கள் எரித்துள்ளனர். அங்குள்ள அமெரிக்க வீரர்கள் ஆப்கானிஸ்தான் ராணுவத்தினரின் அறிவுரையைக் கேட்கவில்லை. சிறை நூலகத்தில் உள்ள நூல்களை வைத்து கைதிகள் தங்களுக்கு கருத்துகளை பரிமாறிக் கொள்கின்றனர் என்று பல முறை உளவுத்துறை தெரிவித்துள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பக்ரம் விமானப்படை தளத்திற்கு அருகில் உள்ள சிறை நூலகத்தில் உள்ள குர்ஆன் மற்றும் மத நூல்கள் தீவிரவாதத்தை தூண்டப் பயன்படுத்தப்படுகிறது என்று கருதி தான் அதை ராணுவ வீரர்கள் எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குர்ஆன் மற்றும் இஸ்லாமிய நூல்களை எரித்த 6 ராணுவ வீரர்களை தண்டிக்குமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
Thanks to: Thatstamil
Published: செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 28, 2012, 14:18 [IST]
No comments:
Post a Comment